2017ஆம் ஆண்டு நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகி உலக அளவில் பெரும் வரவேற்பைப் பெற்ற வலைத்தொடர் 'மணி ஹெய்ஸ்ட்'. இதன் ஐந்து சீசன்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன. புரொபசரின் தலைமையிலான குழுவின் கொள்ளைச் சாகசங்கள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன.
இந்த நிலையில், 'மணி ஹெய்ஸ்ட்' ரசிகர்களுக்கு நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் ஓர் இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளது. ஐந்து சீசன்களுடன் கடந்த 2021ஆம் ஆண்டு நிறைவடைந்த இந்தத் தொடரின் கதைக்களம் இத்துடன் முடிந்துவிடவில்லை என்பதை நெட்ஃபிளிக்ஸ் உறுதிப்படுத்தியுள்ளது. 'மணி ஹெய்ஸ்ட்' தொடரின் ஸ்பின்-ஆஃப் தொடரான 'பெர்லின்' சீசன் 2, மே 15 அன்று வெளியாகும் என நெட்ஃபிளிக்ஸ் அறிவித்துள்ளது.
ரசிகர்கள் பெரிதும் விரும்பிய பெர்லின் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்தத் தொடரில், மேலும் ஒரு பிரம்மாண்டமான கொள்ளைச் சம்பவம் இடம்பெற உள்ளதாகக் கூறப்படுகிறது. பெட்ரோ அலோன்சோ மீண்டும் பெர்லின் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதால், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
குறிப்பாக, 'த ரெவல்யூஷன் நெவர் எண்ட்ஸ்' என்ற வாசகத்துடன் வெளியான டீஸர், 'மணி ஹெய்ஸ்ட்' உலகம் இன்னும் முடிவடையவில்லை என்பதைச் சுட்டிக்காட்டுவதாக சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பேசி வருகின்றனர்.
அந்த டீஸரில் சிவப்பு உடைகள், முகமூடிகள், தங்கக் கட்டிகள் மற்றும் புதிய கொள்ளைச் சம்பவங்களைக் காட்டும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இது நேரடி ஆறாவது சீசனாக வெளிவருமா அல்லது புதிய ஸ்பின்-ஆஃப் தொடரா என்பது குறித்து நெட்ஃபிளிக்ஸ் இன்னும் தெளிவான அறிவிப்பை வெளியிடவில்லை.