தமிழ்நாட்டின் 17வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதில் புதிய சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவராக உதயநிதி ஸ்டாலின் தனது முதல் உரையை சபையில் நிகழ்த்தினார்.
அவர் தனது உரையில், '17வது சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக நான் ஆற்றும் முதல் உரை இது. இந்த தருணத்தில், எங்கள் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்த 1.54 கோடி தமிழ்நாட்டு மக்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இருவருக்கும் எனது வாழ்த்துகள்' என்று பேசினார்.
'தமிழ்நாடு சட்டப்பேரவையில் திராவிட முன்னேற்றக் கழகம் வெறும் எதிர்க்கட்சியாக இல்லாமல், ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாகவே செயல்படும். நாங்கள் எப்போதும் ஒரு ஆக்க சக்தியாகவே இருப்போம்' என அவர் வலியுறுத்தினார்.
'முதலமைச்சர் விஜய், தி.மு.க. தலைவர் இல்லத்திற்கும், மற்ற அரசியல் கட்சித் தலைவர்கள் இல்லத்திற்கும் சென்று வாழ்த்துப் பெற்றார். அந்த அரசியல் நாகரிகம் சட்டப்பேரவையிலும் தொடர வேண்டும் என்பது எங்கள் எண்ணமும் எதிர்பார்ப்பும் ஆகும்' என்றார்.
'முதலமைச்சர் விஜய்யும் நானும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள். ஆனால், அரசை நடத்துவதில் தி.மு.க.வே மூத்த கட்சி. அந்த அடிப்படையில், எங்களுடைய அறிவையும், அனுபவத்தையும் உங்களுடன் (த.வெ.க. அரசு) பகிர்ந்துகொள்ள நாங்கள் (தி.மு.க.) தயாராக இருக்கிறோம். அதைப் பெற்றுக்கொள்ள நீங்களும் தயாராக இருங்கள். ஏனெனில், தமிழ்நாட்டு மக்களின் நலனே நமக்கு எப்போதும் முக்கியம்' என்று குறிப்பிட்டார்.
'சபாநாயகர் அவர்கள் எங்கள் இரு தரப்பினரையும் கைகோத்து அரவணைத்துச் செல்ல வேண்டும். அவைத் தலைவரை கோபப்படுத்தும் வகையில் நாங்கள் ஒருபோதும் செயல்பட மாட்டோம்' என உதயநிதி ஸ்டாலின் உறுதியளித்தார்.
'சட்டமன்றத்தில் ஆளுங்கட்சி காதுகளாகவும், எதிர்க்கட்சிகள் குரலாகவும் இருக்க வேண்டும். அதில்தான் இந்தச் சபையின் பெருமை அடங்கியுள்ளது. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற பாகுபாடு இல்லாமல், மாநில வளர்ச்சிக்காக நாம் அனைவரும் ஒரே வரிசையில் நிற்க வேண்டும். ஆளுங்கட்சிக்கு இணையாகவே எதிர்க்கட்சி வரிசையும் அமைந்துள்ளது' என்றார்.
'அரசின் பதவியேற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டது தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் பெரும் கோபத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது' என்று அவர் சுட்டிக்காட்டினார்.
'மேற்கு வங்கத்தில் 'வந்தே மாதரம்' முதலில் ஒலிக்கிறது. ஆனால், இங்கே தமிழ்த்தாய் வாழ்த்து ஏன் பின்னுக்குத் தள்ளப்பட்டது? முன்பு மு.க. ஸ்டாலின் முதலமைச்சராக இருந்தபோது, இதுபோன்ற ஒரு முயற்சியைத் தடுத்து நிறுத்திய வரலாறு எங்களுக்கு உண்டு. இனிவரும் காலங்களில், குறிப்பாக ஆளுநர் உரை நிகழ்த்தும்போது, இதுபோன்ற மரபுகள் மீறப்படுவதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். தமிழ்நாட்டின் உரிமையையும், மரபையும் காக்க நாங்கள் என்றும் உறுதியுடன் இருப்போம்' என எச்சரித்தார்.
இறுதியாக, 'வெல்க தமிழ்! வாழ்க தமிழ்நாடு! மக்களைப் பிரிக்கும் சனாதனம் நிச்சயம் ஒழிக்கப்பட வேண்டும்!' என்று முழக்கமிட்டு தனது உரையை நிறைவு செய்தார்.