நடிகர் சூர்யா நடிப்பில், ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் வெளியான 'கருப்பு' திரைப்படம், வெளியான நாள் முதலே ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சாய் அபயங்கர் இசையில், திரிஷா கதாநாயகியாக நடித்துள்ள இந்தப் படத்தில், சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நீதிமன்ற வழக்கு மற்றும் கடவுள் நம்பிக்கை ஆகியவற்றை மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது.
படத்தின் வெளியீட்டில் ஏற்பட்ட சில நிதிப் பிரச்சனைகள் காரணமாக, முதலில் திட்டமிடப்பட்டிருந்த வெளியீட்டுத் தேதியான 14ஆம் தேதி படம் வெளியாகாமல் போனது. இதனால், டிக்கெட் முன்பதிவு செய்திருந்த ரசிகர்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர். இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தினார். பின்னர், அனைத்து பிரச்சனைகளும் சரிசெய்யப்பட்டு, 'கருப்பு' திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் வெளியானது.
சென்னை ரோகினி தியேட்டரில் நடைபெற்ற முதல் காட்சியை, நடிகை திரிஷா, இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி மற்றும் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் ஆகியோர் ரசிகர்களுடன் இணைந்து கண்டு ரசித்தனர். படம் வெளியானதை அடுத்து, பல திரையுலக பிரபலங்கள் 'கருப்பு' படத்தை மனதாரப் பாராட்டி வருகின்றனர்.
நடிகர் கமல் ஹாசன் 'கருப்பு' படத்தை பாராட்டி தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், 'சூர்யா சார் கடவுள் அவதாரம் நெருப்பாக இருக்கிறது. படக்குழுவினர் ஒரு மாஸ் ஆக்சன் குடும்ப பிளாக்பஸ்டர் படத்தைக் கொடுத்துள்ளனர். தற்போது, அந்த ஒருவரை (சூர்யா) எதுவும் தடுக்க முடியாது' எனப் பாராட்டியுள்ளார். தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, 'கருப்பு திரைப்படத்தை பார்த்து மிகவும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் உணர்ந்தேன். சூர்யா சார், திரிஷா, சாய் அபயங்கர் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினரும் இந்த கோடைக்காலத்தில் ஒரு மாபெரும் வெற்றிப் படத்தை வழங்கியிருப்பதை கண்டு மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்' என்று தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.