தமிழகத்தில் எந்தவொரு அரசியல் கட்சியையும் தொடங்கினாலும், பெருந்தலைவர் காமராஜரின் பங்களிப்பைத் தவிர்க்க முடியாது என அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். அவரது கொள்கைகளையும், ஆட்சி முறையையும் பின்பற்றி, தமிழ்நாட்டு மக்களுக்கும் மாணவர்களுக்கும் நிச்சயம் ஒரு நல்லாட்சியை வழங்குவோம் என்றும் அவர் உறுதியளித்தார்.
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விக்னேஷ், 'ஜனநாயகன்' திரைப்படம் வெளியாகும் நேரத்தில் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளதாகக் குறிப்பிட்டார். மேலும், படம் வெளியாகும் அந்த மூன்று மணி நேரம் மட்டும், தனது பழைய ரசிகர் மனநிலையுடன் செயல்பட அனுமதி கோரியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
'இனி வாழ்க்கையில் எப்போது முதல் நாள், முதல் காட்சி பார்ப்பேன் என்று தெரியவில்லை. எனவே, படம் வெளியாகும் அந்த மூன்று மணி நேரம் மட்டும், நான் ஒரு ரசிகனாக செயல்பட முதல்வர் அனுமதி தர வேண்டும். வழக்கமாக நான் செல்லும் திரையரங்கில் 'ஜனநாயகன்' படத்தை பார்க்க விரும்புகிறேன்' என்று அவர் கூறினார்.
'ஜனநாயகன்' படத்தைப் பார்ப்பதற்காக ஏற்கனவே விடுப்பு எடுத்துவிட்டதாகவும், ஆனால் முதல்வர் இன்னும் அதற்கு அனுமதி வழங்கவில்லை என்றும் அமைச்சர் விக்னேஷ் தெரிவித்தார்.
மது விற்பனை மூலம் வருவாய் ஈட்டுவது அரசின் நோக்கம் அல்ல என்றும், கடந்த கால தவறுகளை சரிசெய்யும் பணியில் அரசு ஈடுபட்டு வருவதாகவும் அவர் கூறினார். டாஸ்மாக் மதுபான கடைகளை தனியாருக்கு மாற்றும் எண்ணம் அரசுக்கு இல்லை என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.
கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்வது போன்ற முறைகேடுகளைத் தடுக்க சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் விக்னேஷ் எச்சரித்தார். மேலும், துறை சார்ந்த கூடுதல் சீர்திருத்தங்கள் விரைவில் சட்டப்பேரவையில் விரிவாக விவாதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
