இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்டான விக்ரம் 1, விண்ணில் ஏவப்படும் தருவாயில் உள்ளது. ஹைதராபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் 'ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்' நிறுவனம், இந்த ராக்கெட்டை தயாரித்துள்ளது.
முன்னதாக, 'விக்ரம்-எஸ்' என்ற ராக்கெட்டை 2022ல் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி, நாட்டின் முதல் தனியார் விண்வெளி நிறுவனமாக ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் சாதனை படைத்தது. அதன் தொடர்ச்சியாக, தற்போது சிறிய செயற்கைக்கோள்களை புவி சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்தும் திறன் கொண்ட 'விக்ரம் 1' ராக்கெட்டை இந்நிறுவனம் உருவாக்கியுள்ளது.
இந்த ராக்கெட்டின் சோதனை ஓட்டம், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வரும் ஆகஸ்ட் 12 முதல் ஆகஸ்ட் 4 வரையிலான காலகட்டத்திற்குள் 'விக்ரம் 1' விண்ணில் ஏவப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ராக்கெட் 350 கிலோ எடையை சுமந்து செல்லும் திறன் கொண்டது. மேலும், அதிக உந்துவிசை கொண்ட திட எரிபொருள் ராக்கெட் பூஸ்டர்கள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
முதல் பயணத்தில், 450 கிலோமீட்டர் உயரத்தில் 60 டிகிரி சாய்வு கொண்ட சுற்றுப்பாதையில் ஒரு செயற்கைக்கோளை நிலைநிறுத்துவதை இலக்காக கொண்டுள்ளனர். இது இந்தியாவின் தனியார் விண்வெளித் துறைக்கு ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.