சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், பள்ளிக்கல்வித்துறை தனியார் பள்ளிகள் இயக்ககம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் கலந்துகொண்டு தனியார் பள்ளிகளுக்கான அங்கீகார ஆணைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள், தனியார் பள்ளிகள் இயக்கத்தின் அதிகாரிகள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
தனியார் பள்ளிகள் கல்வியை வியாபாரமாக்குவதாக கருத்து நிலவினாலும், கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் மூலம் அனைவருக்கும் கல்வியை உறுதி செய்வதாக அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார். நகைகளை அடமானம் வைத்தும், மிகுந்த சிரமங்களுக்கு இடையேயும் பள்ளிகளை நடத்தும் நிர்வாகிகளின் நிலையை தான் புரிந்துகொள்வதாகவும், பள்ளிகளை நடத்துவது லாபக் கணக்கு அல்ல, புண்ணியக் கணக்கு என்றும் அவர் குறிப்பிட்டார்.
'இனிமேல் எந்த அரசியல்வாதிக்கும் ஒரு ரூபாய் கூட கொடுக்க வேண்டாம். பள்ளிக்கல்வித்துறை அமைச்சரை தெரியும் என்று கூறி யாரேனும் பணம் கேட்டால், அவர்களை அனுமதிக்காதீர்கள்' என அமைச்சர் ராஜ்மோகன் தனியார் பள்ளி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும், ஜூலை 1-ஆம் தேதி முதல் தனியார் பள்ளிகளுக்கான அனுமதிகள் இணைய வழியாக மட்டுமே வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
தனியார் பள்ளிகள் தங்கள் கட்டணத்தை முடிந்தவரை குறைக்க வேண்டும் என்றும், கட்டண விவரங்களை அறிவிப்புப் பலகையில் வெளிப்படையாக வெளியிட வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டார். ஆசிரியர்களிடமும், பணியாளர்களிடமும் மரியாதையாகவும், பெற்றோரிடமும் மாணவர்களிடமும் கனிவாகவும் நடந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். ஆசிரியர் தகுதித் தேர்வு முடித்தவர்களுக்கு தனியார் பள்ளிகளில் வாய்ப்பளிக்க வேண்டும் என்றும், மாணவர்களிடம் நேர்மறையான அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார். தமிழ்நாட்டின் கல்வி மேம்பாட்டிற்காக அனைத்து பாடத்திட்டங்களும் மேம்படுத்தப்படும் என்றும், 1 முதல் 3 ஆம் வகுப்பு வரை புதிய பாடப்புத்தகங்கள் அமலுக்கு வந்துள்ளதாகவும், அடுத்த ஆண்டு 4 முதல் 8 ஆம் வகுப்பு வரை புதிய பாடப்புத்தகங்கள் வரும் என்றும் அவர் கூறினார்.