பிரியாணி சாப்பிட்ட உடனேயே சில குறிப்பிட்ட உணவுகளை உட்கொள்வது செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்துவதோடு, பல்வேறு உடல்நல பாதிப்புகளையும் உண்டாக்கும். குறிப்பாக, பிரியாணி உண்டபின் தர்பூசணி, முலாம்பழம் போன்ற நீர்ச்சத்து நிறைந்த பழங்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில், பிரியாணியில் உள்ள எண்ணெயுடன் பழங்களின் நீர்ச்சத்து சேரும்போது வாய்வுத் தொல்லை ஏற்பட்டு, வயிற்று உப்புசம், வயிற்று வலி, குமட்டல் போன்ற அசௌகரியங்கள் ஏற்படலாம்.
மேலும், பிரியாணி சாப்பிட்ட பிறகு டீ, காபி போன்ற பால் சார்ந்த பானங்களை அருந்துவதும் அஜீரணக் கோளாறுகளுக்கு வழிவகுக்கும். எண்ணெயில் பொரித்த உணவுகளான சிக்கன் 65 போன்றவற்றை பிரியாணியுடன் சேர்த்து சாப்பிடுவது கொழுப்பின் அளவை அதிகரித்து, செரிமான பிரச்சனைகளை தீவிரமாக்கும். எனவே, பிரியாணி சாப்பிடும்போதும், அதற்குப் பின்னரும் எண்ணெயில் பொரித்த உணவுகளை தவிர்ப்பது நல்லது.
பிரியாணி உண்டபின் இனிப்புப் பண்டங்களை சாப்பிடுவதும் உடலில் சர்க்கரை அளவை அதிகரித்து, செரிமான பிரச்சனைகளை உண்டாக்கும். அதேபோல், பிரியாணி சாப்பிட்ட உடனேயே அதிகப்படியான தண்ணீர் குடிப்பதும் வாய்வுத் தொல்லையை அதிகரிக்கச் செய்யும். பிரியாணி சாப்பிட்ட உடனேயே மற்ற உணவுகளை உட்கொள்வதைத் தவிர்த்து, குறைந்தபட்சம் இரண்டு மணி நேர இடைவெளி விடுவது அவசியம்.
பிரியாணி சாப்பிட்ட பிறகு உடனடியாக அமராமல், சுமார் 20 நிமிடங்கள் லேசான நடைப்பயிற்சி மேற்கொள்வது செரிமானத்திற்கு உதவும். குறிப்பாக, இரவு நேரத்தில் பிரியாணி சாப்பிடுவதை முற்றிலும் தவிர்த்து, முடிந்தவரை மதிய வேளையில் உட்கொள்வது சிறந்தது. பிரியாணி சமைக்கும்போது இறைச்சிகள் சரியாக வேகாமல் இருந்தாலோ அல்லது பிற காரணங்களாலோ பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, உணவு உண்டபின் கவனமாக இருப்பது அவசியம்.