திமுக, அதிமுக கூட்டணிக்கு ஒருங்கிணைப்பாளர்களாக ராஜேந்திர பாலாஜியும், அனிதா ராதாகிருஷ்ணனும்தான் இருக்கப்போகிறார்கள் என அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், 'பணம் கொடுத்து ஒருவரை வாங்கினால் தான் குதிரை பேரம். தலைமையை ஏற்றுக்கொள்ள முடியாமல் பதவி விலகல் செய்துவிட்டு வருவது குதிரை பேரம் அல்ல, அது தனிப்பட்ட முடிவு' என்று குறிப்பிட்டார்.
தானாக ராஜினாமா செய்துவிட்டு வருபவர்களை குதிரை பேரம் என்பதா என்றும், யாரையும் திமுக அழைக்கவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார். பதவி விலகல் செய்துவிட்டு வருபவர்களை தவெகவில் சேர்க்க முடியாது என்று எப்படி சொல்ல முடியும் என்றும் அவர் கேட்டார்.
குதிரை பேரம் என்றால் என்னவென்று தெரியுமா? ஆர்.எஸ். பாரதி டைம் பாஸுக்காக சிபிஐக்கு கடிதம் எழுதி கொண்டிருக்கிறார். குதிரை பேரத்தில் ஈடுபட்டது திமுகதானே தவிர, தவெக அல்ல. தற்போது வரை ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் திமுக உள்ளது.
தவெக எம்எல்ஏக்களிடம் குதிரை பேரம் செய்ததால் செந்தில் பாலாஜி உடன் இருந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.
மின் விநியோகம் எப்போதும் தனியார்மயம் ஆகாது என்றும், கல்வி விவகாரத்தில் ஆளுநரும், மத்திய அரசும் விருப்பத்தை சொல்லலாம் என்றும், தவெக அரசு இருமொழிக் கொள்கையில் உறுதியாக உள்ளது என்றும் அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார்.
லஞ்ச ஒழிப்பு துறையில் அனைத்து புகார்களும் விரைவாக விசாரிக்கப்படும் என்றும், பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
