நிதி அமைச்சர் மரிய வில்சனுக்கு கோர்ட்டில் ஆஜராக விலக்கு: ஐகோர்ட் உத்தரவு

தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன்

தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சனுக்கு புதுச்சேரி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக இருந்து சென்னை உயர் நீதிமன்றம் விலக்கு அளித்துள்ளது. சொத்து தகராறு தொடர்பாக சகோதரர் மற்றும் அவரது மனைவியை தாக்கியதாக அமைச்சர் மரிய வில்சன் மீது பதிவு செய்யப்பட்ட குடும்பப் பிரச்சினை தொடர்பான வழக்கை சமரச தீர்வு மையத்திற்கு அனுப்பி, வரும் ஜூலை 13 ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தின் சமரச தீர்வு மையத்தில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

புதுச்சேரியைச் சேர்ந்த நெஸ்தோர் என்பவரின் மகன்கள் மரிய குளோத் மற்றும் மரிய வில்சன் ஆவர். இதில் மரிய வில்சன், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சென்னை ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று, தற்போது தமிழக நிதி அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.

முன்னதாக, மரிய வில்சனுக்கும் அவரது அண்ணன் மரிய குளோத்துக்கும் இடையே சொத்து பிரச்சினை இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக கடந்த 8.8.2022 அன்று, மரிய வில்சன் மற்றும் அவரது தந்தை நெஸ்தோர் ஆகியோர், புதுச்சேரியில் உள்ள மரிய குளோத்தின் வீட்டிற்குள் புகுந்து, அவரையும் அவரது மனைவி கேர்லின் குளோத்தையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. மேலும், வீட்டில் இருந்த பொருட்களையும் அடித்து சேதப்படுத்தியதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கேர்லின் குளோத் புதுச்சேரியில் உள்ள லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், மரிய வில்சன் மற்றும் நெஸ்தோர் ஆகியோர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு புதுச்சேரி முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி சேரலாதன் முன்னிலையில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில், மரிய வில்சன் மீதான குற்றப்பத்திரிகையை காவல்துறை தாக்கல் செய்திருந்தது.

குற்றப்பத்திரிகை நகலை அமைச்சர் மரிய வில்சன் நேரில் ஆஜராகிப் பெற வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டிருந்தார். கடந்த சனிக்கிழமை வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அமைச்சர் மரிய வில்சன் ஆஜராகாததால், ஜூலை 10 ஆம் தேதிக்குள் புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு மீண்டும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், அமைச்சர் மரிய வில்சன் புதுச்சேரி நீதிமன்றத்தில் ஜூலை 10 ஆம் தேதி ஆஜராவதில் இருந்து சென்னை உயர் நீதிமன்றம் விலக்கு அளித்துள்ளது. சொத்து தகராறில் சகோதரர் மற்றும் அவரது மனைவியை தாக்கியதாக அமைச்சர் மரிய வில்சன் மீது பதியப்பட்ட குடும்பப் பிரச்சினை தொடர்பான வழக்கை சமரச தீர்வு மையத்திற்கு அனுப்பி நீதிபதி இளந்திரையன் உத்தரவிட்டார். மேலும், வரும் ஜூலை 13 ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தின் சமரச தீர்வு மையத்தில் ஆஜராக அமைச்சர் மரிய வில்சனுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version