மனித நேயம் தழைக்க பாடுபடுவோம் – எடப்பாடி பழனிசாமி பக்ரீத் வாழ்த்து

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பக்ரீத் திருநாளை முன்னிட்டு இஸ்லாமியப் பெருமக்களுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இறை நம்பிக்கை கொண்டவர்கள் எந்த தியாகத்திற்கும் அஞ்சமாட்டார்கள் என்பதை உணர்த்தும் இந்த திருநாள், இறைவனின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து தனது ஒரே மகனை தியாகம் செய்ய முன்வந்த இறைத்தூதர் இப்ராஹிம் அவர்களின் ஈடு இணையற்ற தியாகத்தை நினைவு கூரும் நாள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பக்ரீத் திருநாள், இறைவனின் விருப்பத்திற்கு இணங்க வாழ்வதே சிறந்த வாழ்க்கை நெறி என்பதை உலகிற்கு உணர்த்தும் பொன்னாள் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். நாட்டின் வளர்ச்சிக்கும், சமூக முன்னேற்றத்திற்கும் தடையாக இருக்கும் அதர்மம், அநீதி, சூழ்ச்சி, வன்மம் போன்றவற்றை வேரோடு அழித்து, நற்சிந்தனைகளும் நன்னெறிகளும் வெற்றிபெற தியாகங்களும் அர்ப்பணிப்புகளும் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இறைத்தூதரின் தியாகங்களை மனதில் கொண்டு, மனித நேயம் தழைக்க அர்ப்பணிப்பு உணர்வுடன் பாடுபடுவோம் என இந்த பக்ரீத் திருநாளில் அனைவரும் உறுதியேற்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். இஸ்லாமியப் பெருமக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இந்த இனிய திருநாளில், உலகில் அன்பும் அமைதியும் தழைத்தோங்க வேண்டும் என்றும் அவர் வாழ்த்தியுள்ளார்.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் புரட்சித் தலைவி அம்மா ஆகியோரின் வழியில், இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு தனது பக்ரீத் திருநாள் வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்குவதாக எடப்பாடி பழனிசாமி தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். அனைவரும் மனிதநேயத்துடனும், சகோதரத்துவத்துடனும், தியாகச் சிந்தனையுடனும் வாழ வேண்டும் என அவர் மனதார வாழ்த்தியுள்ளார்.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version