சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் மதுரை வடக்குத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த டாக்டர் பா.சரவணன், மீண்டும் கட்சி தாவி தவெக-வில் இணைந்துள்ளார். மதுரை மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக தோல்வியடைந்த நிலையில், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூக்கு நெருக்கமான சில அதிமுக நிர்வாகிகள் ஏற்கனவே தவெக-வில் இணைந்தனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள், டாக்டர் பா.சரவணன் அமைச்சர் ஆனந்த் முன்னிலையில் தவெக-வில் தன்னை இணைத்துக்கொண்டார்.
டாக்டர் பா.சரவணன் இதற்கு முன்னர் மதிமுக, திமுக, பாஜக போன்ற கட்சிகளிலும் இருந்தவர். ஒவ்வொரு கட்சியிலும் தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மற்றும் தேர்தலில் போட்டியிட 'சீட்' கிடைக்காத விரக்தி காரணமாக அவர் கட்சி மாறி வந்துள்ளார். கடைசியாக பாஜகவில் இருந்து அதிமுகவில் இணைந்து 2024 மக்களவை தேர்தலில் மதுரையில் போட்டியிட்டு மூன்றாம் இடம் பிடித்தார். தற்போது முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மதுரை வடக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டும், உள்ளூர் நிர்வாகிகள் எதிர்ப்பை மீறி அவர் மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டார்.
முன்னதாக, 2019-ம் ஆண்டு திருப்பரங்குன்றம் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று இரண்டு ஆண்டுகள் எம்.எல்.ஏ.வாக இருந்தார். 2021 சட்டப்பேரவை தேர்தலில் திமுகவில் சீட் கிடைக்காததால் விலகி பாஜகவில் சேர்ந்து, மறுநாளே அதிமுக கூட்டணியில் வடக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக, திமுகவில் சேர முயற்சித்தும் அது பலனளிக்கவில்லை. பின்னர் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மூலம் அதிமுகவில் இணைந்தார்.
தற்போது மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களில் தோல்வியடைந்ததால் தவெக-வில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. டாக்டர் பா.சரவணன் பல கட்சிகளுக்கு மாறி வந்ததால், அதிமுகவில் இணைந்தபோது திமுக, பாஜக உள்ளிட்ட கட்சியினர் அவரை 'சர்வ கட்சி சரவணன்' என விமர்சித்தனர். அதிமுக நிர்வாகிகள் சிலர், 'கொள்கைப் பிடிப்பில்லாத, லாப நோக்குடன் இருந்தவர்கள் அதிமுகவை விட்டு வெளியேறுகிறார்கள். டாக்டர் பா.சரவணன் உள்ளாட்சித் தேர்தலில் மேயர் பதவியை எதிர்பார்த்து தவெக-வில் இணைந்துள்ளார். அங்கு சீட் கிடைக்காவிட்டால் மீண்டும் வெளியேறுவார். உள்ளாட்சித் தேர்தலில் அவரவர் சொந்த செல்வாக்கிலேயே வெற்றி பெற முடியும், அதனால் தவெக-வுக்கு செல்வோர் வெற்றி பெற வாய்ப்பில்லை' என்றும் கருத்து தெரிவித்தனர்.

