சென்னை, கடற்கரை சாலையில் ரூபாய் 8.93 கோடி மதிப்பீட்டில் 19741 சதுரடியில் புதிதாக கட்டப்பட்டு வரும் பாரத சாரண சாரணியர் தலைமை அலுவலக கட்டுமானப் பணிகளை அமைச்சர் ராஜ்மோகன் நேரில் சென்று பார்வையிட்டார். பணிகளை தரமானதாகவும், விரைவாகவும் செய்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.
மேலும், கடலூர் மாவட்டம், நல்லூர் ஊராட்சி ஒன்றியம், பெலாந்துறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 5-ஆம் வகுப்பு பயிலும் மாணவி என்.எஸ்.இசை 1330 திருக்குறள்களை ஒப்புவித்து அதற்கான பொருளையும் விளக்கிக் கூறினார். தொடர்ந்து, அதே பள்ளியில் பயிலும் 5-ஆம் வகுப்பு மாணவி எஸ்.காவ்யா 195 நாடுகளின் தேசியக் கொடியினை பார்த்து அதன் நாட்டின் பெயரை சரியாகக் கூறினார்.
மாணவிகளுடன் கலந்துரையாடிய அமைச்சர், அவர்களின் தனித்திறமைகளை மேலும் வளர்த்துக் கொள்ள வேண்டுமெனக் கூறி அவர்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்து பரிசுகள் வழங்கினார். இந்த ஆய்வின் போது, பள்ளிக்கல்வி இயக்குநர் முனைவர். ச.கண்ணப்பன், தொடக்கக்கல்வி இயக்குநர் முனைவர் பூ.ஆ.நரேஷ், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் செந்தில்வேல், உதவிப் பொறியாளர் தமிழரசி, பெலாந்துறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் சி.தவச்செல்வி, உதவி ஆசிரியர் பு.இராபர்ட் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

