அதிமுக மனுக்கள் மீது நாளை அறிவிப்பு – சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்

சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சிப் பூசல் காரணமாக, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி மற்றும் சி.வி.சண்முகம் – எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அணி என இரு பிரிவுகள் உருவாகின. இதில், சி.வி.சண்முகம் – எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அணி, நம்பிக்கை வாக்கெடுப்பின்போது விஜய் தலைமையிலான அரசுக்கு ஆதரவாக வாக்களித்தது.

இதனையடுத்து, கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் சி.வி.சண்முகம் – எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அணியினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பில் சபாநாயகர் ஜேசிடி பிரபாகரிடம் மனு அளிக்கப்பட்டது. அதேபோல், சட்டமன்ற கொறடா மற்றும் சட்டமன்றக் குழு தலைவர் பதவி தொடர்பாக சி.வி.சண்முகம் – எஸ்.பி.வேலுமணி அணியினரும் சபாநாயகரிடம் ஒரு மனுவைச் சமர்ப்பித்திருந்தனர்.

இந்நிலையில், இன்று அதிமுகவில் பிரிந்திருந்த இரு அணிகளும் ஒன்றிணைந்தன. இதைத் தொடர்ந்து, இரு தரப்பினரும் சபாநாயகரைச் சந்தித்து, தாங்கள் ஏற்கனவே அளித்திருந்த மனுக்களை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர். இந்த சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், 'அதிமுக உறுப்பினர்கள் அளித்த மனுக்களைப் படித்து ஆய்வு செய்து, நாளை காலை முறையான அறிவிப்பை வெளியிடுவேன்' என்று தெரிவித்தார்.

அதிமுகவில் பிரிந்திருந்தவர்கள் தற்போது இணைந்துள்ளார்களே என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த சபாநாயகர், 'இது குறித்து நீங்கள் அவர்களிடம்தான் கேட்க வேண்டும். எனக்கு அவர்கள் மனு கொடுத்திருக்கிறார்கள். அடுத்து அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்பதை நீங்கள் அவர்களிடம்தான் கேட்க வேண்டும்' என்று கூறினார்.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version