தமிழக சட்டப்பேரவையில் உரையாற்றிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, திமுகவின் 5 ஆண்டு கால ஆட்சியையும், தற்போதைய த.வெ.க ஆட்சியையும் ஒப்பிட்டு பேசினார். 'நீங்கள் 5 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தீர்கள், நாங்கள் ஆட்சிக்கு வந்து 3 மாதங்கள்தான் ஆகிறது. 5 வருடம் ஆட்சியிலிருந்த திமுக, 3 மாதத்தில் மட்டுமே ஆட்சியில் உள்ள தவெகவுடன் ஒப்பீடு செய்வது நியாயமா?' என்று அவர் கேள்வி எழுப்பினார்.
விவசாயிகள் கண்ணீரோடு இருந்ததாகவும், ஆனால் த.வெ.க ஆட்சி விவசாயிகளின் பொற்காலமாக அமையும் என்றும் அமைச்சர் உறுதியளித்தார். முதலமைச்சர் விஜயின் 5 ஆண்டு கால ஆட்சியில் விவசாயிகளின் வாழ்வு வளம் பெறும் என்றும், அவர் சொன்னதை செய்வார் என்றும் கூறினார்.
திமுக ஆட்சியில் கரும்பு விவசாயம் மிகவும் பாதிக்கப்பட்டதாகவும், கரும்பு சாகுபடி 30 சதவீதமாக குறைந்துவிட்டதாகவும் ஆதவ் அர்ஜூனா தெரிவித்தார். இதனால், தமிழ்நாட்டிற்கு தேவையான சர்க்கரையை மகாராஷ்டிராவில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
மகாராஷ்டிராவில் கரும்பு விவசாயத்தை மேம்படுத்த கூட்டுறவு சங்கங்கள், தனி திட்டங்கள், சொட்டு நீர் மேலாண்மை திட்டம் போன்றவை செயல்படுத்தப்பட்டதன் விளைவாக அம்மாநிலம் கரும்பு உற்பத்தியில் முதலிடத்தில் உள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். கடந்த திமுக ஆட்சியில் இதுபோன்ற திட்டங்கள் உருவாக்கப்படவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
முதலமைச்சர் விஜயின் திட்டங்கள் மூலம் விரைவில் தமிழகமும் கரும்பு உற்பத்தியில் மகாராஷ்டிராவிற்கு நிகராக முன்னிலைக்கு வரும் என அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும், இலவச ரேஷன் அரிசியின் தரம் உயர்த்தப்பட்டு, அதை சமைத்து சாப்பிடும் வகையில் ஊக்கத்தொகை உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். ரேஷன் அரிசியின் தரத்தை மேம்படுத்துவதே இதன் நோக்கம் என்றும் அவர் விளக்கினார்.
