திமுக கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நாளை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீப காலமாக, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திமுக கூட்டணி தொடர்பாக பல அதிருப்திகளை வெளிப்படுத்தி வந்துள்ளார். தங்களை விட பலம் குறைந்த பிற கட்சிகளுக்கு கூடுதல் தொகுதிகள் ஒதுக்கப்பட்ட போதும், தன்மானத்தை விட்டுக் கொடுத்து திமுக கூட்டணியில் தொடர்ந்ததாக அவர் வருத்தம் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையில், மதிமுக முதன்மைச் செயலாளரும், எம்.பி-யுமான துரை வைகோ சமீபத்தில் முதலமைச்சர் விஜய்யை சந்தித்து, தனது தொகுதி சார்ந்த சில கோரிக்கைகளை முன்வைத்தார். தனது கோரிக்கைகள் அடுத்த நாளே முதலமைச்சர் விஜய் செயல்படுத்தத் துவங்கியதாக துரை வைகோ குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், இன்று நடைபெற்ற உயர்நிலைக் குழு கூட்டத்தில், திமுக கூட்டணியில் மதிமுகவிற்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்றும், உடனடியாக கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என்றும் பெரும்பாலான நிர்வாகிகள் வைகோவிடம் வலியுறுத்தியுள்ளனர். மேலும், திமுக கூட்டணியில் இருந்து வெளியேறினால், அடுத்து விஜய் தலைமையிலான தவெக கூட்டணியில் இணைவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
மதிமுக தலைமை, திமுக கூட்டணியை விட்டு வெளியேறி தவெக கூட்டணியில் இணைய திட்டமிட்டுள்ளதால், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தனது இரு எம்.எல்.ஏ-க்களையும் பதவிகளை ராஜினாமா செய்யுமாறு கட்சித் தலைமை அறிவுறுத்தியுள்ளது. இருப்பினும், கடையநல்லூர் எம்.எல்.ஏ ராசேந்திரன் மற்றும் சீர்காழி எம்.எல்.ஏ செந்தில் செல்வன் ஆகியோர் இதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று நடைபெற்ற மதிமுக உயர்நிலைக் குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட அம்சங்களின் தொடர்ச்சியாக, சென்னை அண்ணா நகரில் உள்ள ஒரு தனியார் விடுதியில் நாளை மதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில், மதிமுகவின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்து இறுதி முடிவெடுக்கப்பட்டு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அன்று மாலை 3.30 மணியளவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களைச் சந்திப்பார். அப்போது திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவது குறித்து உரிய அறிவிப்பை வெளியிடுவார் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.