மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு இரு இனக்குழுக்களிடையே மோதல் வெடித்தது. இந்த மோதல் வன்முறையாக மாறியதை அடுத்து, அம்மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. பின்னர், ராணுவம் குவிக்கப்பட்டு வன்முறை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதைத் தொடர்ந்து, அமலில் இருந்த ஜனாதிபதி ஆட்சி விலக்கிக் கொள்ளப்பட்டது. மாநில முதல்-மந்திரியாக கடந்த பிப்ரவரி மாதம் பாஜகவின் யும்னம் கெம்சந்த் சிங் பதவியேற்றார்.
தொடர்ந்து, மணிப்பூரில் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையவர்களை கைது செய்யும் நடவடிக்கையிலும் பாதுகாப்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, மணிப்பூரின் கிழக்கு இம்பால் மற்றும் தவ்பெல் ஆகிய மாவட்டங்களில் பாதுகாப்புப் படையினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின் போது, பல்வேறு பகுதிகளில் பதுங்கியிருந்த 4 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள், தோட்டாக்கள், வெடிகுண்டுகள் உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்களையும் பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட 4 பயங்கரவாதிகளிடமும் பாதுகாப்புப் படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கைது நடவடிக்கை மணிப்பூரில் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.