நெல்லை மாவட்டம் அம்பை அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள மணிமுத்தாறு அருவி, சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரசித்தி பெற்றதாகும். ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டும் இந்த அருவியில் ஏராளமானோர் உற்சாகமாக குளித்து மகிழ்வது வழக்கம்.
இந்நிலையில், தென்மேற்கு பருவமழை நேற்று முன்தினம் தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் காரணமாக, கேரள மாநிலத்தின் பல பகுதிகள் மற்றும் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
குறிப்பாக, அம்பாசமுத்திரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று முன்தினம் முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால், மணிமுத்தாறு அருவிக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. இதனால் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, வனத்துறையினர் சுற்றுலாப் பயணிகளுக்கு 3-வது நாளாக குளிக்க தடை விதித்துள்ளனர்.
தற்போது, அருவியை பார்வையிட மட்டுமே சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அருவியில் வெள்ளப்பெருக்கு குறையும் பட்சத்தில் மீண்டும் குளிக்க அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.