தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மகளிர் உரிமைத் தொகை திட்டம், சாமானிய மற்றும் கிராமப்புற மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று, பணப்புழக்கத்தை அதிகரித்தது. ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி இந்தத் தொகை மகளிர் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படுகிறது.
நடிகர் விஜய், தனது தேர்தல் வாக்குறுதியாக ஆட்சிக்கு வந்தால் மாதம் ரூ.2500 மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார். ஆனால், கடந்த மாதம் வழக்கமான ரூ.1000 மட்டுமே வழங்கப்பட்டது. இதனால், விஜய் அறிவித்த ரூ.2500 எப்போது வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் பெண்கள் காத்திருக்கின்றனர்.
இந்த சூழலில், விருதுநகரில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெகதீஸ்வரி, மகளிர் உரிமைத் தொகை குறித்து முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அவர் கூறுகையில், 'நிறைய தாய்மார்கள் 2500 ரூபாய் குறித்து கேட்கிறார்கள். தற்போது, வழக்கம்போல் மாதம் 1000 ரூபாய் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. 2500 ரூபாய் வழங்குவதற்கான வழிமுறைகள் குறித்து நாங்கள் தீவிரமாக ஆராய்ந்து வருகிறோம். இது ஒரு நீண்ட செயல்முறை என்பதால், சிறிது காலம் எடுக்கும். நமது மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நிச்சயமாக, உறுதியாக 2500 ரூபாய் உங்களுக்கு வழங்கப்படும். இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை' என்று தெரிவித்தார்.
மேலும், விண்ணப்பித்தும் பணம் வரவில்லை என்று பலர் மனு அளிப்பதாகவும், இது போன்ற கோரிக்கைகள் பரிசீலனையில் இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். தகுதியிருந்தும் பணம் கிடைக்காதவர்கள், கடந்த ஆட்சியில் மனுக்கள் நிராகரிக்கப்பட்டவர்கள் போன்றோரின் விவரங்கள் சரிசெய்யப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
'சிலர் வீட்டில் இரண்டு பேர் மனு கொடுத்திருப்பதாகவும், சிலர் கொடுக்கவில்லை என்றும், இது போன்ற சிறு சிறு விஷயங்களைச் சரிசெய்த பின்னரே, அனைத்து மக்களுக்கும் பயன்பெறும் வகையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும். அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. எனவே, பொதுமக்கள் சிறிது பொறுமை காக்க வேண்டும்' என்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
'நிச்சயமாக நமது மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கூறியது போல் 2500 ரூபாய் வழங்கப்படும் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்!' என்று அமைச்சர் ஜெகதீஸ்வரி தனது பேச்சின்போது உறுதியளித்தார். இந்த அறிவிப்பு, மகளிர் உரிமைத் தொகை பெறுவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் களையப்பட்டு, விரைவில் கூடுதல் தொகை வழங்கப்படும் என்ற நம்பிக்கையை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.
