மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே, சித்திரை திருவிழாவின் போது ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக 17 வயது சிறுவன் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை தொடர்பாக, சிறுவன் உட்பட 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சம்பவம் குறித்து காவல்துறையினர் தரப்பில் கூறப்பட்டதாவது: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான வாகன நிறுத்தத்தில் குபேந்திரன் என்ற 17 வயது சிறுவன் நின்றுகொண்டிருந்தான். அப்போது, இருசக்கர வாகனங்களில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் அவனை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியோடியது. இதுகுறித்து விளக்குத்தூண் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆராய்ந்தனர்.
விசாரணையில், கடந்த மாதம் சித்திரை திருவிழாவின் போது, சிறுவன் குபேந்திரனுக்கும், முத்துமணி என்ற தொத்தல் முத்துமணி என்பவருக்கும் இடையே வடக்குமாசி வீதி அருகிலுள்ள கழிப்பறையில் மோதல் ஏற்பட்டதும், அதில் முத்துமணி காயமடைந்ததும் தெரியவந்தது. இந்த முன்விரோதத்தின் காரணமாகவே, ஆத்திரமடைந்த முத்துமணி, குபேந்திரனை கொலை செய்ய திட்டமிட்டு காத்திருந்ததாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில், முத்துமணி, அவரது தம்பி ராஜ் உள்ளிட்ட 5 பேர் கொண்ட கும்பல் குபேந்திரனை வெட்டி கொலை செய்தது.
இதுதொடர்பாக விளக்குத்தூண் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, திடீர் நகரைச் சேர்ந்த முத்துமணி, அவரது தம்பி ராஜ், முத்துகுமார், மேலவாசல் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார், வடக்குமாசி வீதியைச் சேர்ந்த 18 வயது சிறுவன் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து கொலைக்கு பயன்படுத்திய அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள், பைக்குகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும், கொலையான குபேந்திரன் மீது 5-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். கொலைகாரர்களை விரைந்து கைது செய்த காவல்துறையினரை காவல் ஆணையர் அபிஷேக் தீட்சித் பாராட்டினார்.