மதுரை அருகே கார் விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி!

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. கோயிலுக்குச் சென்று திரும்பிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர், கார் சாலை தடுப்புச் சுவரில் மோதி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த துயரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விபத்து மாலை 5 மணியளவில், மதுரை அருகே கொட்டாம்பட்டி அணுகுசாலை – நான்கு வழிச் சாலை சந்திப்பில் நடந்துள்ளது. சென்னையில் இருந்து சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்குச் சென்றுவிட்டு, காரில் மதுரை நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையின் நடுவே இருந்த தடுப்புச் சுவரில் பயங்கரமாக மோதியது. காரின் முன்பகுதி அப்பளம்போல நொறுங்கியது. இந்த கோர விபத்தில், காரில் பயணித்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்களில் மதுரை அண்ணா நகரைச் சேர்ந்த பிரகாஷ் (76), சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த வெங்கடேஷ் (60), அவரது தாய் வசந்தா (90), மனைவி ஆஷா (58), மற்றும் மாமியார் சுலோச்சனா (72) ஆகியோர் அடங்குவர். காரை வெங்கடேஷ் ஓட்டி வந்துள்ளார். சுவாமி தரிசனம் முடித்துவிட்டு மதுரை திரும்பும்போது இந்த துயரம் நிகழ்ந்துள்ளது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் இப்படி ஒரு விபத்தில் சிக்கி உயிரிழந்தது உறவினர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த கொட்டாம்பட்டி காவல்துறையினர், காரில் சிக்கியிருந்த உடல்களை மீட்டு மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தின் 5 பேர் பலியான செய்தி மதுரையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version