பீகாரின் சசாரம் ரயில் நிலையத்தில் இன்று அதிகாலை பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பாட்னா செல்லும் பயணிகள் ரயில், சசாரம் ரயில் நிலைய நடைமேடையில் நின்றுகொண்டிருந்தபோது, திடீரென ரயிலின் ஒரு பெட்டியில் தீப்பிடித்து எரிந்தது. இந்த பயங்கர தீ விபத்து, ரயிலில் இருந்த பயணிகளிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியது.
தீயைக்கண்ட பயணிகள் பதற்றத்துடன் அலறியடித்துக்கொண்டு ரயிலை விட்டு வெளியேறினர். உடனடியாக ரயில்வே அதிகாரிகளுக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பெரும் போராட்டத்திற்குப் பிறகு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அதிர்ஷ்டவசமாக, இந்த விபத்தில் யாருக்கும் எந்தவிதமான காயமும் ஏற்படவில்லை என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆரம்பகட்ட விசாரணையில், மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என ரயில்வே துறை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து ரயில்வே போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த அசம்பாவிதம் காரணமாக ரயில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.
முன்னதாக, நேற்று அதிகாலையில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து டெல்லிக்குச் சென்ற ராஜ்தானி விரைவு ரயிலிலும் இதேபோன்ற தீ விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக இதுபோன்ற ரயில் தீ விபத்துக்கள் நடப்பது பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

