மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே, 17 வயது சிறுவன் ஒருவன் கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு ஆவணி மூல வீதி பகுதியில் உள்ள மாநகராட்சி கார் பார்க்கிங்கில் நேற்று நள்ளிரவு இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. பைக்கில் வந்த மர்ம கும்பல் ஒன்று, குபேந்திரன் என்ற சிறுவனை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளது.
சம்பவம் குறித்து தகவலறிந்த விளக்குத்தூண் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், கடந்த மாதம் சித்திரை திருவிழாவின் போது குபேந்திரனுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த முத்துமணி என்ற தொத்தல் முத்துமணிக்கும் இடையே கழிப்பறை அருகே ஏற்பட்ட மோதல் காரணமாக இந்த கொலை நடந்திருப்பது தெரியவந்துள்ளது. இந்த மோதலில் முத்துமணிக்கு காயம் ஏற்பட்டதால், ஆத்திரமடைந்த அவர் குபேந்திரனைக் கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார்.
நேற்று இரவு, குபேந்திரன் மீனாட்சி அம்மன் கோயில் கார் பார்க்கிங் அருகே நின்றுகொண்டிருந்தபோது, 2 இருசக்கர வாகனங்களில் வந்த முத்துமணி, அவனது சகோதரன் ராஜ் மற்றும் சதீஷ் குமார், ஹரி கிருஷ்ணன், முத்துக்குமார் ஆகிய ஐந்து பேர் கொண்ட கும்பல் அவனை வழிமறித்து பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியுள்ளனர். தப்பி ஓட முயன்ற குபேந்திரனை விடாமல் துரத்திச் சென்று கொடூரமாக கொலை செய்துவிட்டு, அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இந்த காட்சிகள் அனைத்தும் சிசிடிவி பதிவுகளில் பதிவாகியுள்ளன.
இதையடுத்து, உயிரிழந்த சிறுவனின் உடலை கைப்பற்றிய காவல்துறையினர், பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட சிறுவன் குபேந்திரன் மீதும் ஆயுதம் வைத்திருத்தல் உள்ளிட்ட 5 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. மீனாட்சி அம்மன் கோயில் போன்ற புனிதமான மற்றும் பாதுகாக்கப்பட்ட பகுதிக்கு அருகே இதுபோன்ற சட்டவிரோத செயல்கள் நடப்பது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, காவல்துறையினர் இப்பகுதியில் ரோந்துப் பணியை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
