கோவையில், காதலை ஏற்க மறுத்த இளம்பெண்ணின் வீட்டின் மீது மண்ணெண்ணெய் நிரப்பிய மதுபான பாட்டில்களை வீசி தீவைக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கொலை மிரட்டல் விடுத்த இளைஞர்கள் மற்றும் அவரது நண்பர்கள் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொண்டாமுத்தூர் அருகே கலிக்கநாயக்கன்பாளையம் சிபிசி கார்டன் பகுதியைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி, தாளியூர் பேரூராட்சியில் பிட்டராக பணிபுரிகிறார். இவரது மகள், கோவையில் உள்ள கல்லூரியில் படிக்கும்போது சென்னையைச் சேர்ந்த கார்த்திக் (எ) மாரியப்பன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. ஆனால், கார்த்திக் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட 31-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதை அறிந்த இளம்பெண், அவரிடமிருந்து காதலை முறித்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
காதலை ஏற்க மறுத்ததால், கார்த்திக் தொடர்ந்து அந்தப் பெண்ணிற்கு தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை கார்த்திக் தனது நண்பர்கள் 3 பேருடன் இருசக்கர வாகனங்களில் கலிக்கநாயக்கன்பாளையம் வந்து, இளம்பெண்ணின் வீட்டிற்கு வெளியே நின்றிருந்த அவரது தந்தை சுந்தரமூர்த்தியிடம் தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். பின்னர், மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய் நிரப்பப்பட்ட பீர் மற்றும் மதுபான பாட்டில்களை வீட்டின் மீது வீசியுள்ளனர்.
அவர்கள் வீசியதில் ஒரு பாட்டில் வெடித்து, வீட்டின் போர்டிகோ பகுதியில் இருந்த ஷூ ஸ்டாண்ட் மீது விழுந்து தீப்பிடித்தது. இதில் ஷூக்கள் எரிந்து சாம்பலாகின. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பாட்டில்களை வீசிவிட்டு தப்பியோடிய கும்பல் குறித்து சுந்தரமூர்த்தி தொண்டாமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், கார்த்திக் மற்றும் அவரது நண்பர்கள் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர். குடியிருப்புப் பகுதியில் நடந்த இந்த துணிகரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.