சென்னை கோபாலபுரத்தில் உள்ள அரசுப் பள்ளியில் 11 வயது மாணவி ஒருவரை, மாதவிடாய் காரணமாக வகுப்பறைக்கு வெளியே நிற்க வைத்ததாக ஆசிரியர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு, மாணவியிடம் இருந்து துர்நாற்றம் வீசுவதாகக் கூறி, பள்ளி முடியும் வரை வகுப்பறைக்கு வெளியே நிற்கும்படி ஆசிரியர் உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், மாணவி பள்ளி முடியும் வரை வெளியே நின்று வீட்டிற்குச் சென்று பெற்றோரிடம் நடந்ததைக் கூறி அழுததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியே நிற்க வைக்கப்பட்டதால், மாணவியின் காலில் வீக்கம் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘சென்னையில் மாதவிடாயின் போது துர்நாற்றம் வீசுவதாகக் காரணங்காட்டி, 11 வயது அரசுப் பள்ளி மாணவியை வகுப்பறைக்கு வெளியேயே பள்ளி முடியும் வரை நிற்க வைத்ததாக வெளிவந்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. ஏற்கனவே அரசுப் பள்ளிகளில் போதிய கழிப்பறை வசதியில்லாமையாலும் தண்ணீர் வசதி இல்லாமையாலும் பல பெண் குழந்தைகள் மாதவிடாய் காலங்களில் பள்ளிக்குச் செல்வதற்கே தயங்கும் வேளையில், இப்படி ஒரு பிற்போக்கான சம்பவம் மாநிலத் தலைநகரில் உள்ள அரசுப் பள்ளியிலேயே நடந்திருப்பது, தமிழகப் பெண்கள் முன்னேற்றத்தில் விழுந்த பெரும் கீறல்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இதுகுறித்து முதல்வர் உடனடியாகக் கருத்தில் கொண்டு, புகாரை ஆராய்ந்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இது போன்ற குறுகிய மனப்பான்மை மேலும் வளரவிடாமல் தடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். அத்தோடு நில்லாமல், தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் போதிய கழிப்பறை மற்றும் தண்ணீர் வசதிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.