சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த், 'மக்கள் மேடை' என்ற புதிய மக்கள் இயக்கத்தை தொடங்கியுள்ளார். மாற்றத்தை விரும்புவோர் அனைவரும் தங்களோடு இணைந்து பணியாற்றலாம் என அவர் அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட வீடியோவில், 'அனைவரும் ஒன்றிணைந்து ஒரு பெரும் மக்கள் சக்தியாக உருவெடுத்து பல நல்ல காரியங்களை செய்வோம். 'சிட்டிசன் பிளாட்பார்ம்' என்ற எங்கள் இயக்கத்தில் ஆர்வம் இருக்கக்கூடிய யார் வேண்டுமானாலும் சேரலாம்' என்று தெரிவித்துள்ளார்.
மேலும், 'பெரும் மக்கள் சேவையாக, மக்கள் சக்தியாக உருவாகி இந்த சமூகத்திற்கு பல நன்மைகளை செய்ய அனைவரும் முன் வாருங்கள். ஒன்று சேருவோம். ஆக்கப்பூர்வமான மக்களுக்கான காரியங்களை செய்வோம். மூத்த குடிமக்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ், அரசு அதிகாரிகள், ஆசிரியர்கள் என அனைத்து தரப்பினரும் உங்களின் அனுபவத்தை எங்களுக்கு கொடுக்கலாம். எங்களுடன் இணைந்து தமிழ்நாட்டுக்காகவும், தொகுதிக்காகவும் நீங்கள் வேலை செய்யலாம். உள்ளூர் தலைவர்களை உருவாக்க நாங்கள் விரும்புகிறோம்' என்றும் லதா ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளார்.
இந்த இயக்கத்தில் இணைவதற்கான விவரங்களையும் அவர் தனது வீடியோவில் அளித்துள்ளார். இயக்கத்தில் சேருவதற்கு 7550080515 என்ற தனி செல்ஃபோன் எண்ணையும், makkalmedaitn12@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியையும் அவர் வழங்கியுள்ளார்.
முன்னதாக, பாஜக-வில் இருந்து விலகிய அண்ணாமலை 'வி த லீடர்' (We The Leader) என்ற இயக்கத்தை தொடங்கி, அதனை விரைவில் அரசியல் கட்சியாக மாற்றி 2031 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக அறிவித்திருந்தார். இந்த சூழலில், லதா ரஜினிகாந்த் புதிய இயக்கத்தை தொடங்கியிருப்பது அரசியல் வட்டாரத்தில் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.