பீகாரைச் சேர்ந்த விகாஷ் குமார் என்ற பிளம்பர், தனது வங்கிக் கணக்கில் திடீரென ரூ.294 கோடி வரவு வைக்கப்பட்டதால் அதிர்ச்சியடைந்துள்ளார். மாதம் ரூ.12,000 சம்பாதிக்கும் இவரது கணக்கில் முதலில் ரூ.113 மட்டுமே இருப்பு இருந்தது. பின்னர், ஒரே நாளில் ரூ.294 கோடி வரவு வைக்கப்பட்டதை கண்டு முதலில் நம்ப முடியாமல் போனாலும், இருப்பு தொகையை சரிபார்த்தபோது பெருமகிழ்ச்சி அடைந்தார்.
பீகாரின் கயா ஜி மாவட்டத்தில் உள்ள புத்தகயாவிற்கு அருகில் உள்ள மஸ்துபுரா கிராமத்தைச் சேர்ந்த விகாஷ் குமார், குழாய் பழுது பார்க்கும் தொழிலாளியாக உள்ளார். அவரது வங்கிக் கணக்கில் திடீரென இவ்வளவு பெரிய தொகை வரவு வைக்கப்பட்டதன் பின்னணி குறித்து வங்கி நிர்வாகமும் காவல்துறையும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றன. இது வங்கித் தவறா, தொழில்நுட்பக் கோளாறா அல்லது ஏதேனும் மோசடி கும்பலின் வேலையா என போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்.
இந்தச் செய்தி பரவியதும், கிராம மக்கள் விகாஷின் வீட்டிற்கு வந்து அவரைப் பார்க்கத் தொடங்கினர். இந்த அசாதாரண பணப் பரிவர்த்தனை குறித்து, சம்பந்தப்பட்ட வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள மற்ற கணக்குகள் மற்றும் பணப் பரிமாற்ற எண்கள் குறித்தும் ஆய்வு செய்யப்படுவதாக போலீஸ் அதிகாரி மனோஜ் குமார் சிங் தெரிவித்துள்ளார்.
விகாஷ் குமார் இந்த விஷயத்தை வங்கிக்குத் தெரிவித்த பிறகு, வங்கி நிர்வாகம் இது குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளது. இவ்வளவு பெரிய தொகை எப்படி அவரது கணக்கிற்கு வந்தது என்பது விரைவில் வெளிச்சத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.