நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் சமீபத்தில் பெய்த மழையால் வனப்பகுதி முழுவதும் பசுமையாகக் காட்சியளிக்கிறது. இந்த சூழலில், அரிய வகை குறிஞ்சி மலர்கள் பூத்துக் குலுங்கத் தொடங்கியுள்ளன.
பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கக்கூடிய இந்த குறிஞ்சி மலர்கள், தற்போது மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அதிக அளவில் பூத்துள்ளன. ஊதா மற்றும் நீல நிறங்களில் காணப்படும் இந்த மலர்கள், மலைப் பகுதி முழுவதும் பரவி பூத்துக் குலுங்குவது கண்கொள்ளாக் காட்சியாக அமைந்துள்ளது. இது நீலகிரி மலையின் அழகிற்கு மேலும் மெருகூட்டுவதாக உள்ளது.
மரப்பாலம், பெரிய சோலை, ஊசிமலை மற்றும் அருகிலுள்ள சில பிரபலமான பூங்காக்களிலும் குறிஞ்சி மலர்கள் மிக அதிக அளவில் பூத்துள்ளன. இதனால், இந்தப் பகுதிகள் முழுவதும் ரம்மியமான சூழல் நிலவி, பார்ப்போரின் கண்களுக்கு விருந்தளிக்கும் விதமாக காட்சியளிக்கின்றன.
உதகை – கூடலூர் தேசிய நெடுஞ்சாலை, மலைப் பாதைகள் மற்றும் ஊசிமலை காட்சி முனைப் பகுதி உள்ளிட்ட இடங்களில் பூத்துக் குலுங்கும் குறிஞ்சி மலர்களைக் காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனர். பலர் பூக்கள் பூத்திருக்கும் பகுதிகளை புகைப்படம் எடுத்தும், செல்ஃபி எடுத்தும் மகிழ்ந்தனர்.
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கக் கூடிய இந்த அரிய வகை மலர்களைக் காண, தற்போது அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் நீலகிரியில் குவிந்து வருகின்றனர். சுற்றுலாப் பயணிகளை மட்டுமின்றி, ஏராளமான தேனீக்களும் வண்ணத்துப் பூச்சிகளும் இந்த குறிஞ்சி மலர்களை நாடி வருவதைக் காண முடிகிறது.
இருப்பினும், ஓவேலி போன்ற பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதால், அப்பகுதிகளுக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். மேலும், சுற்றுலாப் பயணிகள் குறிஞ்சிப் பூக்களைப் பறித்து சேதப்படுத்துவதைத் தடுக்க வன ஊழியர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வன விலங்குகளின் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில், குறிஞ்சி மலர் செடிகளுக்கு அருகே சென்று புகைப்படம் எடுக்கவும் வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இதனால், சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பான தூரத்திலிருந்தே குறிஞ்சி மலர்களை புகைப்படம் எடுத்து மகிழ்ந்து வருகின்றனர். இந்த அரிய நிகழ்வைக் காண வரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்கு வனத்துறை முன்னுரிமை அளித்துள்ளது.
