சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கொல்கத்தாவில் பிரம்மாண்ட கொண்டாட்டம் நடைபெற உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
யோகா தினத்தை ஆண்டுதோறும் கொண்டாட வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தினார். இதற்காக அவர் 2014ம் ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றினார். அமெரிக்கா, கனடா, சீனா உள்ளிட்ட பல நாடுகள் அவரது பரிந்துரையை ஆதரித்தன. இதன் விளைவாக, 2014ம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி, 193 உறுப்பினர்கள் கொண்ட ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது ஜூன் 21ம் நாளை சர்வதேச யோகா தினமாக அறிவித்தது.
இந்த ஆண்டு, இந்தியா உட்பட 135க்கும் மேற்பட்ட நாடுகளில் யோகா பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொல்கத்தாவில் நடைபெறும் கொண்டாட்டத்திற்கு பிரதமர் மோடி தலைமை தாங்குவார். மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தின் யோகா சங்கம் சார்பாக, நாடு முழுவதும் ஒரே நேரத்தில் பிரதமர் மோடியுடன் யோகா நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக yoga.ayush.gov.in/yoga-sangam என்ற இணையதளத்தில் யோகா சங்க நிகழ்வுகளை பதிவு செய்யுமாறு ஆயுஷ் அமைச்சகம் அழைப்பு விடுத்திருந்தது.
இந்த அழைப்பிற்கு நாடு முழுவதும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. பள்ளிகள், கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சமூகக் குழுக்கள் என பல்வேறு அமைப்புகள் பிரதமர் தலைமையிலான யோகா கொண்டாட்டத்தில் பங்கேற்க ஆர்வத்துடன் பதிவு செய்துள்ளன. நாடு முழுவதும் 778 மாவட்டங்களில் இருந்து, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்தும் அமைப்புகள் பதிவு செய்துள்ளன. இதில் 3.22 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு நிறுவனங்கள், 2 லட்சம் கல்வி நிறுவனங்கள், 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் சுமார் 44 ஆயிரம் பிற அமைப்புகள் பங்கேற்கின்றன.