கோடைக்காலத்தில் உடலில் நீர்ச்சத்து குறைவதால் முதியவர்கள் மற்றும் சிறு குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சிறுநீரகத்தின் முக்கியத்துவத்தையும், அதை பாதுகாக்கும் வழிமுறைகளையும் அவர்கள் விளக்கியுள்ளனர்.
பொதுவாக, நமது உடலில் சிறுநீரகங்கள் கழிவுப் பொருட்களை வெளியேற்றும் முக்கிய பணியைச் செய்கின்றன. சிறுநீரகம் செயலிழந்தால், டயாலிசிஸ் அல்லது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை போன்ற தீவிர சிகிச்சைகள் தேவைப்படும். நாள்பட்ட சிறுநீரகக் கோளாறு என்பது, சிறுநீரகங்கள் கழிவுகளை வெளியேற்றும் திறனை இழப்பதாகும்.
கோடைக்காலத்தில் அதிக வியர்வை வெளியேறுவதால், உடலுக்குத் தேவையான நீர்ச்சத்து கிடைக்கவில்லை என்றால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகும் வாய்ப்பு அதிகம். மேலும், முதியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு நீர்ச்சத்து குறையும்போது, சிறுநீரகங்களில் பாதிப்பு ஏற்பட்டு உடல்நலக் குறைவு ஏற்படலாம். எனவே, சிறுநீரக ஆரோக்கியத்திற்கு ஒரு நாளைக்கு குறைந்தது 10 முதல் 12 டம்ளர் தண்ணீர் குடிப்பது அவசியம்.
நீர்ச்சத்து நிறைந்த வெள்ளரி, தர்பூசணி போன்ற பழங்களை உணவில் சேர்த்துக்கொள்வது உடலுக்குத் தேவையான நீரேற்றத்தை அளிக்கும். மேலும், உணவில் அதிகப்படியான உப்பை சேர்ப்பது இரத்த அழுத்தத்தை அதிகரித்து, சிறுநீரகங்களைப் பாதிக்கும். தினமும் 4 முதல் 5 கிராமுக்கு மேல் உப்பை உட்கொள்வதைத் தவிர்ப்பது நல்லது. உயர் இரத்த அழுத்தம், இதய பாதிப்பு, தீவிர சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் உப்பைக் குறைப்பது மிகவும் முக்கியம். பீன்ஸ், கொண்டைக்கடலை, பெர்ரி வகை பழங்கள், தர்பூசணி போன்ற நார்ச்சத்துள்ள உணவுகளும் சிறுநீரக செயல்பாட்டிற்கு உதவும்.