கேரளாவில் சமீபத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது. இதையடுத்து, முதல்வராக வி.டி.சதீசன் பதவியேற்றார். முதல்வராகப் பதவியேற்ற பிறகு முதல்முறையாக அவர் டெல்லி சென்று காங்கிரஸ் மூத்த தலைவர்களைச் சந்தித்துப் பேசினார்.
நேற்று முன்தினம் இரவு டெல்லி வந்த வி.டி.சதீசனுக்கு, டெல்லியில் உள்ள கேரள இல்லத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதைத் தொடர்ந்து, நேற்று அவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, கே.சி.வேணுகோபால், பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்களைச் சந்தித்துப் பேசினார்.
சட்டப்பேரவைத் தேர்தலில் தனக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்த மேலிடத் தலைவர்களுக்கு சதீசன் இந்த சந்திப்பின்போது நன்றி தெரிவித்தார். மேலும், கட்சியின் அமைப்பு ரீதியான விஷயங்கள் மற்றும் புதிய கேரள அரசின் செயல்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கேரளாவில் கட்சிக்கு புதிய மாநிலத் தலைவரை நியமிப்பது குறித்து காங்கிரஸ் கட்சிக்குள் ஆலோசனைகள் நடந்து வரும் நிலையில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. வரும் வாரத்தில் பிரதமர் மோடியையும் வி.டி.சதீசன் சந்திக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

