கேரள மாநிலத்தின் புதிய முதல்வராக வி.டி.சதீசன் இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருடன் ஐக்கிய ஜனநாயக முன்னணி (IUML) கட்சியைச் சேர்ந்த 5 அமைச்சர்களும், பிற கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த 4 அமைச்சர்களும் பதவியேற்றனர். இந்த முக்கிய நிகழ்வில், காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி மற்றும் கர்நாடகா, தெலுங்கானா, இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களின் முதலமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டனர்.
இந்நிலையில், கேரளாவின் புதிய முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள வி.டி.சதீசனுக்கு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) தளப் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், 'ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சிகளின் சார்பில் இன்று கேரளத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கும் மாண்புமிகு வி.டி.சதீசன் அவர்களுக்கு, எனது தனிப்பட்ட சார்பிலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (அதிமுக) சார்பில் ஒட்டுமொத்த தொண்டர்களின் சார்பிலும், நெஞ்சார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்' என்று எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.
கேரளாவில் புதிய ஆட்சி பொறுப்பேற்றுள்ள நிலையில், அதிமுகவின் வாழ்த்து முக்கியத்துவம் பெறுகிறது. எதிர்கால அரசியல் நகர்வுகளுக்கு இந்த வாழ்த்து ஒரு முன்னோட்டமாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.