தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் நிலவி வரும் சலசலப்புகளுக்கு மத்தியில், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை ஒன்றிணையுமாறு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார். 'விட்டில் பூச்சிகளாக வீழ்ந்துவிடாதீர்கள், அனைவரும் ஒன்று கூடுவோம்' என்று அவர் உருக்கமாகக் கேட்டுக்கொண்டுள்ளார்.
சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபித்த நாளில், தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவாக அதிமுகவின் 25 எம்எல்ஏக்கள் வாக்களித்தது அக்கட்சிக்குள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, அதிமுகவில் பிளவு ஏற்பட்டு, 47 எம்எல்ஏக்கள் இருவேறு தரப்புகளாக பிரிந்துள்ளனர். இந்தச் சூழலில், கட்சிக்குள் நிலவும் கருத்து வேறுபாடுகளைப் பேசித் தீர்த்துக்கொள்ளுமாறு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
'தமிழக வெற்றிக் கழகம், பதவி ஆசை காட்டி நம் நிர்வாகிகளைப் பிரிக்க முயற்சித்தது வேதனையான உண்மை. தற்போது அவர்கள் பொய்க்கால் குதிரை ஆட்சியை அமைத்துள்ளனர். அதிமுக ஆட்சி விரைவில் அமையும், ஒளிமயமான எதிர்காலம் நமக்குக் காத்திருக்கிறது' என்று எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். மேலும், எதிரிகளின் ஆசை வார்த்தைகளுக்கு மயங்கி, 'கம்பீரமான ஆலமரத்தின் அடிமரத்தையே வெட்டி சாய்க்கப் பார்க்கும் சிலர், கீழே விழுந்து உருக்குலைந்து போவார்களே தவிர, ஆலமரத்திற்கு எந்தத் தீங்கும் வராது' என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட அதிமுக, 31 ஆண்டு காலம் தமிழ்நாட்டை ஆட்சி செய்து, ஏழைகளைக் காத்து, அனைத்துத் துறைகளிலும் மாநிலத்தை முதன்மை மாநிலமாக உருவாக்கியுள்ளது. தேர்தல் வெற்றிகளும் தோல்விகளும் சகஜம் என்றும், எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற தலைவர்களும் பின்னடைவுகளைச் சந்தித்து மீண்டு வந்தவர்கள்தான் என்றும் அவர் நினைவுபடுத்தினார். அதிமுகவின் கோடானுகோடி தொண்டர்கள் ஒருபோதும் பதவிக்காக இருந்ததில்லை என்றும், எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடித்து பொற்கால ஆட்சி நடத்தியதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்தார்.
2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழக்கவில்லை என்றும், 21.21 சதவீத வாக்குகள் பெற்று, 47 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதாகவும் அவர் புள்ளிவிவரங்களுடன் விளக்கினார். மக்கள் விருப்பத்தையும், பின்னடைவையும் ஏற்றுக்கொள்வதாகவும், ஆனால் துவண்டுவிடப் போவதில்லை என்றும் அவர் உறுதியளித்தார். தோல்விகளில் இருந்து பாடம் கற்று, ஆட்சியைப் பிடிக்கும் இயக்கம் அதிமுக என்றும் அவர் குறிப்பிட்டார். எந்தக் கட்சிக்கும் மக்கள் முழு ஆதரவை அளிக்கவில்லை என்றும், திமுக கூட்டணிக் கட்சிகளின் காலில் விழுந்து பொய்க்கால் குதிரை அரசு ஆட்சி அமைத்துள்ளதாகவும், அதிமுகவின் முதுகில் குத்தி குதிரை பேர அரசியல் நடத்தியதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
எம்ஜிஆர், ஜெயலலிதா காலம் முதல் துரோகம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதும், அவர்கள் திருந்தினால் தாயுள்ளத்துடன் மீண்டும் ஏற்றுக்கொள்வதும் அதிமுகவின் வழக்கம் என்றும், அதன் அடிப்படையிலேயே செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். ஐந்து கட்சிகளின் ஆதரவில் காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கும் இந்த பொய்க்கால் குதிரையின் நடனம் சிலகாலம்தான் என்றும், அதிமுகவின் காவல் தெய்வங்களான எம்ஜிஆர், ஜெயலலிதா புகழ் இருக்கும் வரை, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் செழித்து வளரும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.