காஞ்சிபுரம் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும், குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தவும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின் பேரில் கடந்த இரண்டு நாட்களாக மாவட்டம் முழுவதும் அதிரடி தணிக்கை மற்றும் சோதனைகள் நடத்தப்பட்டன. இதில், பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய மொத்தம் 169 சரித்திர பதிவேடு குற்றவாளிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட 169 ரவுடிகளில், குற்றப் பின்னணி கொண்ட 59 பேர் காஞ்சிபுரம் சார் ஆட்சியர் மற்றும் உட்கோட்ட நிர்வாக நடுவர் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். இனிமேல் எந்தவித சட்டவிரோத அல்லது குற்றச்செயல்களிலும் ஈடுபடமாட்டோம் என உறுதிமொழி பெற்றுக்கொண்டதன் அடிப்படையில், அவர்கள் ஓராண்டு கால நன்னடத்தை பிணையில் விடுவிக்கப்பட்டனர். அதேசமயம், தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த 8 பேர் மீது புதிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அவர்கள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர்.
மேலும், மாவட்டத்தில் போதைப்பொருள் புழக்கம் மற்றும் கள்ளச்சாராய விற்பனையை முற்றிலும் தடுக்கும் நோக்கில் 3 சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, கள்ளத்தனமாக மதுபாட்டில்களை விற்பனை செய்த 2 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது போன்ற குற்றங்களைத் தடுக்கும் பொருட்டு, தொடர்ந்து சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த அதிரடி நடவடிக்கைகள் மூலம் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தி, மாவட்டத்தில் அமைதியான சூழலை உறுதிசெய்ய காவல்துறை முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. பொதுமக்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து, குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.