கடையநல்லூர் அருகே 1,300 கிலோ புகையிலை பறிமுதல்: வியாபாரி கைது!

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே, பூட்டிக் கிடந்த குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,300 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். இதன் மதிப்பு சுமார் 8 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய வியாபாரி ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளதுடன், மேலும் ஒருவரைத் தேடி வருகின்றனர்.

மேல கடையநல்லூர் இந்திரா நகர் பகுதியில் நீண்ட நாட்களாக பூட்டிக் கிடந்த ஒரு குடோனில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு, அங்கிருந்து பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக அவரது உத்தரவின் பேரில், புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு மதன் தலைமையில், கடையநல்லூர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மேரி ஜெமிதா, சப்-இன்ஸ்பெக்டர் சம்சுதீன் மற்றும் போலீஸார் கொண்ட குழுவினர், இந்திரா நகர் பகுதியில் உள்ள அந்த குடோனில் அதிரடியாக சோதனை நடத்தினர்.

சோதனையின் போது, குடோனில் ஏராளமான மூட்டைகளில் மொத்தம் 1,300 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தப் புகையிலை பொருட்களின் சந்தை மதிப்பு சுமார் 8 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் என போலீஸார் தெரிவித்துள்ளனர். இந்த குடோனில் இருந்து புகையிலை மூட்டைகளை போலீஸார் கைப்பற்றி, மேல் நடவடிக்கைகளுக்காக கொண்டு சென்றனர்.

மேலும் நடத்திய விசாரணையில், கடையநல்லூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த வியாபாரி சக்திவேல் (50 வயது) என்பவர், இந்த புகையிலை பொருட்களை வாங்கி வந்து குடோனில் பதுக்கி வைத்து, பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து, போலீஸார் சக்திவேலை கைது செய்தனர். இதற்கிடையில், இந்த வழக்கில் தொடர்புடைய சக்திவேலின் உறவினரான வைரமுத்து (41 வயது) என்பவரை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version