ராமேஸ்வரம் கோவில்: ₹3.5 கோடி லட்டு மோசடி – 9 பேர் மீது நடவடிக்கை!

ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோவிலில் பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் லட்டு பிரசாதத்தில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது அம்பலமாகியுள்ளது. இந்த மோசடியால் சுமார் 3 கோடியே 40 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தரும் ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோவிலில், பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த இலவச லட்டு விநியோகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக (2023 முதல் தற்போது வரை) 22 லட்சத்து 71 ஆயிரம் லட்டுகள் வழங்கப்பட்டதில், சுமார் ரூ.3 கோடியே 40 லட்சம் ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்திருப்பதாக கோவில் நிர்வாகத்தின் உள் விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக கோவில் இணை ஆணையர் செல்லத்துரை தலைமையிலான குழு தீவிர விசாரணை நடத்தியது. இந்த விசாரணையின் முடிவில், பிரசாதப் பிரிவு பேஸ்கார் பஞ்சமூர்த்தி, பணியாளர் விக்ரம், பிரசாதக் கடையில் பணியாற்றிய சிவனேஸ்வரி, விற்பனையாளர் செல்வி, விற்பனை பிரசாதப் பிரிவு பொறுப்பாளர் லாவண்யா, இலவச லட்டு பிரிவு பணியாளர் அம்பிகா ஆகிய 6 பேர் உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், பிரபு, ரவி, பாலாஜி ஆகிய 3 தற்காலிகப் பணியாளர்களும் வேலையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இலவச லட்டு விநியோகத்தில் நடந்த இந்த பெரும் மோசடி பக்தர்களிடையே அதிர்ச்சியையும், மிகுந்த வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கோவில் நிர்வாகம் இதுகுறித்து மேலும் தீவிர விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version