ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷி, தனது அதிரடியான பேட்டிங்கால் பல உலக சாதனைகளை சுக்குநூறாக உடைத்து புதிய வரலாறு படைத்துள்ளார். அவர் படைத்த அந்த பிரம்மாண்ட உலக சாதனைகள் என்னென்ன என்பதை விரிவாக பார்ப்போம்.
ஜெய்ப்பூரில் நடந்த குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் 230 ரன்கள் என்ற இமாலய இலக்கை துரத்திய ராஜஸ்தான் அணிக்கு, வைபவ் சூர்யவன்ஷி தொடக்க வீரராக களமிறங்கினார். முகமது சிராஜ் வீசிய இன்னிங்சின் முதல் பந்தையே சிக்சருக்கு பறக்கவிட்டு தனது கணக்கை அதிரடியாக தொடங்கினார். தொடர்ந்து ககிசோ ரபாடா வீசிய ஓவரிலும் 2 சிக்சர்களை விளாசினார்.
இந்த போட்டியில் 16 பந்துகளை சந்தித்த அவர் 3 பவுண்டரி மற்றும் 3 சிக்சர்கள் உட்பட 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த 3 சிக்சர்கள் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் 6 ஓவர்கள் கொண்ட பவர் பிளேவில் 30 சிக்சர்களை விளாசிய முதல் வீரர் என்ற புதிய சாதனையை அவர் படைத்துள்ளார். இதற்கு முன் சன்ரைசர்ஸ் அணியின் அபிஷேக் சர்மா 29 சிக்சர்கள் அடித்ததே அதிகபட்ச சாதனையாக இருந்தது.
அதுமட்டுமின்றி, ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட் வரலாற்றில் 20 வயதிற்கு முன்பாகவே 100 சிக்சர்களை விளாசிய உலகின் முதல் மற்றும் ஒரே வீரர் என்ற இமாலய உலக சாதனையையும் வைபவ் சூர்யவன்ஷி தன்வசப்படுத்தியுள்ளார். இதில் கூடுதல் சிறப்பு என்னவென்றால், அதிவேகமாக 100 சிக்சர்களை அடித்த வீரர் என்ற வரலாற்றுச் சாதனையையும் இவர் முறியடித்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி மன்னன் கீரன் பொல்லார்ட் 843 பந்துகளில் 100 சிக்சர்கள் அடித்ததே இதுவரை உலக சாதனையாக இருந்தது. ஆனால், வைபவ் வெறும் 514 பந்துகளிலேயே 100 சிக்சர்களை பறக்கவிட்டு பொல்லார்ட் சாதனையை மிக எளிதாக தவிடுபொடியாக்கினார்.
நடப்பு 2026 ஐபிஎல் தொடரில் இதுவரை 11 போட்டிகளில் விளையாடியுள்ள வைபவ், 440 ரன்கள் குவித்து மொத்தம் 40 சிக்சர்களை பதிவு செய்துள்ளார். இதன் மூலம் ஒரு ஐபிஎல் சீசனில் 40 சிக்சர்கள் அடித்த 2வது இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். முதலிடத்தில் உள்ள அபிஷேக் சர்மா 42 சிக்சர்கள் அடித்துள்ளார். இந்த சாதனையை முறியடிக்க வைபவ் இன்னும் 3 சிக்சர்கள் மட்டுமே அடிக்க வேண்டும்.
வைபவ் சூர்யவன்ஷி இந்தப் போட்டியில் 16 பந்துகளில் 36 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் மோசமாக பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி படுதோல்வி அடைந்தது.