2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடர் அதன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் பிளே-ஆப் சுற்றுக்கு முதல் 2 இடங்களைப் பிடித்து தகுதி பெற்றுள்ள அணிகள் யார் என்பது உறுதியாகியுள்ளது. புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடித்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள், மே 26 அன்று நடைபெற உள்ள முதல் தகுதிச் சுற்றுப் போட்டியில் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இந்த முக்கிய போட்டி இமாச்சலப் பிரதேசத்தின் தர்மசாலாவில் உள்ள அழகிய மலைப்பகுதி மைதானத்தில் நடைபெற உள்ளது.
இதுவரை நடந்த ஐபிஎல் சீசனில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைட்டன்ஸ், மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய மூன்று அணிகள் தலா 18 புள்ளிகளுடன் பிளே-ஆஃப் வாய்ப்பை உறுதி செய்துள்ளன. ரன் ரேட் அடிப்படையில், பெங்களூரு அணி முதலிடத்திலும், குஜராத் அணி இரண்டாம் இடத்திலும் உள்ளன. இதனால், இந்த இரு அணிகளும் முதல் தகுதிச் சுற்றில் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும். தோல்வியடையும் அணிக்கு இறுதிப் போட்டிக்கு செல்ல மற்றொரு வாய்ப்பு வழங்கப்படும்.
நான்காவது இடத்தைப் பிடித்து பிளே-ஆஃப் சுற்றுக்குள் நுழையும் கடைசி அணி எது என்பதில் தற்போது பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 14 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது. அந்த அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியில் ராஜஸ்தான் வெற்றி பெற்றால், எந்தவித சிக்கலும் இன்றி பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறிவிடும். ஒருவேளை ராஜஸ்தான் தோல்வியடைந்தால், பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் ஆகிய அணிகளுக்கு நூலிழையில் வாய்ப்பு கிடைக்கும்.
புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் நான்காவது இடத்தைப் பிடிக்கும் அணி (பெரும்பாலும் ராஜஸ்தான்) மே 27 அன்று சண்டிகரில் நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில் மோதும். இதில் தோற்கும் அணி தொடரிலிருந்து வெளியேறும். வெற்றி பெறும் அணி, முதல் தகுதிச் சுற்றில் தோற்ற அணியுடன் மே 29 அன்று மோதும். 2026 ஐபிஎல் தொடரின் கோப்பை யாருக்கு என்பதைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டி, மே 31 அன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது. நடப்பு சாம்பியனான பெங்களூரு அணி மீண்டும் கோப்பை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.