இந்திய யூனியன் முஸ்லிம் லீக், திமுக உடனான கூட்டணியை இனி தொடரப்போவதில்லை என அதிரடியாக அறிவித்துள்ளது. சென்னை ராயபுரத்தில் நடைபெற்ற அக்கட்சியின் தமிழ்நாடு மாநில பொதுக்குழு கூட்டத்திற்குப் பிறகு, தேசிய தலைவர் கே.எம். காதர் மொகிதீன் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ’60 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த திமுக உடனான கூட்டணியை இனி தொடர வேண்டாம் என பொதுக்குழுவில் 14 முக்கிய தீர்மானங்களில் ஒன்றாக முடிவு செய்யப்பட்டுள்ளது. இனி தமிழக வெற்றிக் கழக (தவெக) கூட்டணியிலேயே இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடரும்’ என்று தெரிவித்தார்.
மேலும், ‘தமிழ்நாட்டில் ஜனாதிபதி ஆட்சி அமைந்துவிடக் கூடாது, அதன் மூலம் மறைமுகமாக பாஜக ஆட்சி வந்துவிடக் கூடாது என்ற நோக்கில் தவெகவுடன் இணைந்தோம். அகில இந்திய தலைமையுடன் ஆலோசனைக்குப் பிறகு, ஷாஜகான் அமைச்சரவையில் இடம் பெற ஒப்புதல் அளிக்கப்பட்டது. தவெக அரசு நல்லாட்சியை வழங்க வேண்டும். இந்த ஆட்சி தொடர எல்லா வகையிலும் துணை நிற்போம்’ என்றும் அவர் கூறினார்.
‘தவெக கூட்டணிக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. பெயர் சூட்டப்படாத அந்தக் கூட்டணியில்தான் நாங்கள் உள்ளோம். இன்றும், நாளையும் அதில் தொடர்வோம்’ என்றும் காதர் மொகிதீன் குறிப்பிட்டார். இஸ்லாமிய மார்க்கத்தின் ஐந்து கடமைகளில் ஜனநாயகத்தில் வாக்களிப்பதும் ஒன்று என தான் கூறியதாகவும், ஆனால் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என கூறவில்லை என்றும் அவர் விளக்கினார். சட்டம் – ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு போன்ற பிரச்சினைகள் குறித்து முதலமைச்சர் சட்டமன்றத்தில் பதிலளிப்பார் என்றும், மேகதாது அணை கட்டப்பட்டால் காவிரி நீர் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.