இந்திய ரயில்வேயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், ஒழுங்கை மேம்படுத்தவும் புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்பட உள்ளன. வரும் 1ம் தேதி முதல் இந்த புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வரும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன்படி, இனி பெண்கள் பெட்டிகளில் ஆண்கள் ஏறினால் ₹2,500 அபராதம் விதிக்கப்படும்.
மேலும், ரயில் நிலையங்களில் அனுமதியின்றி பொருட்கள் விற்பனை செய்தால் ₹2,000 அபராதம் விதிக்கப்படும். இந்த தொகையை செலுத்த மறுத்தால், நீதிமன்றம் மூலம் ₹5,000 வரை அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும். முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் அனுமதியின்றி பயணிப்பவர்களுக்கு ₹2,000 அபராதம் விதிக்கப்படும். ரயிலில் புகைபிடித்தால் ₹2,000 அபராதம் விதிக்கப்படும்.
ரயில்களிலும் ரயில்வே வளாகங்களிலும் அனுமதியின்றி நடைபாதை வியாபாரம் மற்றும் பிச்சை எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. மீறினால் ₹2,000 அபராதம் விதிக்கப்படும். மீண்டும் மீண்டும் தவறு செய்பவர்களுக்கு ஓராண்டு வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம். இதுதவிர, தொந்தரவு செய்தல், தகாத வார்த்தைகளைப் பயன்படுத்துதல், ரயில்வே வசதிகளுக்கு இடையூறு செய்தல் அல்லது சக பயணிகளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துதல் போன்ற செயல்களில் ஈடுபடும் பயணிகளுக்கு ₹1,000 அபராதம் விதிக்கப்படும்.
போதையில் ரயிலில் பயணித்து இடையூறு செய்பவர்கள் ரயில்கள் மற்றும் நிலையங்களில் இருந்து அகற்றப்படுவார்கள். மேலும், தடைசெய்யப்பட்ட அல்லது அபாயகரமான பொருட்களை ரயில்களில் எடுத்துச் சென்றால், குறைந்தபட்சம் ₹10,000 அபராதம் விதிக்கப்படலாம். ஒதுக்கப்பட்ட பெட்டிகள், இருக்கைகள் அல்லது படுக்கைகளை ஆண்கள் ஆக்கிரமிக்கும்போது அவர்களுக்கு ₹2,500 அபராதம் விதிக்கப்படும். இந்த விதிமுறைகளை மீறுவோர் மீது ரயில்வே ஊழியர்கள் கடும் நடவடிக்கை எடுப்பார்கள்.