கனடாவில் உயர்கல்வி பயின்று வந்த 23 வயது இந்திய மாணவி, லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த காதலனால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக கனடா அதிகாரிகள் கொலை வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பஞ்சாபின் லூதியானா மாவட்டத்தில் உள்ள சம்ராலாவைச் சேர்ந்த தமன்பிரீத் கவுர், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு உயர்கல்விக்காக மாணவர் விசா மூலம் கனடா சென்றிருந்தார். தென்கிழக்கு எட்மண்டனில் உள்ள சில்வர்பெர்ரி பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த இவர், கடந்த ஜூலை 9 ஆம் தேதி படுகாயங்களுடன் ஆபத்தான நிலையில் தனது வீட்டில் மீட்கப்பட்டார். உடனடியாக அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி ஜூலை 12 ஆம் தேதி உயிரிழந்தார்.
ஜூலை 14 அன்று நடைபெற்ற பிரேத பரிசோதனையின் முடிவில், தமன்பிரீத் கவுரின் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டது அம்பலமானது. இந்த கொடூரச் சம்பவம் தொடர்பாக, இந்தியாவைச் சேர்ந்த 22 வயது ரித்திஷ் குமார் என்பவரை கனடிய காவல்துறை கைது செய்துள்ளது.
கொலை செய்யப்பட்ட தமன்பிரீத் கவுரும், கைது செய்யப்பட்ட ரித்திஷ் குமாரும் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இருவருக்கும் இடையே ஏற்பட்ட ஒரு சிறு பிரச்சனை இந்த கொலையில் முடிந்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து ரித்திஷ் குமாரை காவல்துறையினர் தீவிர விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.
இந்தச் சம்பவம் கனடாவில் வசிக்கும் இந்தியர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த தமன்பிரீத் கவுரின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்காக GoFundMe என்ற தளத்தின் மூலம் நிதி திரட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
கனடாவில் இந்திய மாணவி ஒருவர் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த காதலனால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம், வெளிநாடுகளில் கல்வி பயிலும் மாணவர்களின் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்த வழக்கில் நியாயம் கிடைக்க வேண்டும் என உறவினர்களும், நண்பர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், இது போன்ற சம்பவங்கள் இனி நிகழாமல் தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
