சேலம் ரயில்வே கோட்டம், ஓடும் ரயில்கள் மீது கல் எறிவது பயணிகளின் பாதுகாப்புக்கும், ரயில்வே சொத்துக்களுக்கும், ரயில் இயக்கத்திற்கும் பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாகவும், இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து சேலம் ரயில்வே கோட்டம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், 'ஓடும் ரயில்கள் மீது கல் எறிவது மிகவும் அபாயகரமானது. இது பயணிகளின் பாதுகாப்பு, ரயில்வே சொத்துக்கள், ரயில் இயக்கங்களுக்கு ஒரு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. இத்தகைய குற்றங்கள் மீது ரயில்வே சட்ட விதிகளின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2025 ஆம் ஆண்டில் மட்டும் ரயில்கள் மீது கல் எறிந்ததாக மொத்தம் 38 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நடப்பு ஆண்டில் இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 5 வழக்குகள் சிறுவர்கள் சம்பந்தப்பட்டவை. ரயில்வே பாதுகாப்புப் படை மற்றும் ரயில்வே போலீசார் நடத்திய விசாரணையில், ரயில் தண்டவாளங்களுக்கு அருகில் விளையாடும் சிறுவர்கள், இதன் விளைவுகளைப் புரிந்து கொள்ளாமல் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
கல் எறிதலின் அபாயங்கள் குறித்து பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கைது உள்ளிட்ட கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். ரயில் தண்டவாளங்களுக்கு அருகில் சந்தேகத்திற்கும்படி யாரும் நடமாடினால், பயணிகள் மற்றும் பொதுமக்கள் உடனடியாக ரயில்வே பாதுகாப்புப் படை அல்லது போலீசாரிடம் புகார் தெரிவிக்கலாம் என்றும் அந்த செய்திக்குறிப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.