2026 மகளிர் டி20 உலகக் கோப்பையின் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை 64 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இந்த ஆட்டத்தில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஆட்டநாயகி விருது வென்ற தீப்தி சர்மா, தனது நெகிழ்ச்சியான பேட்டியில், 'ஹனுமான் ஜி தான் காரணம்' என்று குறிப்பிட்டார்.
பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் குவித்தது. தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 68 ரன்களும், இறுதி நேரத்தில் ரிச்சா கோஷ் அதிரடியாக 34 ரன்களும் எடுத்தனர். கேப்டன் ஹர்மன்பிரீத் கவுருடன் மந்தனா அமைத்த பார்ட்னர்ஷிப் அணிக்கு வலுவான அடித்தளத்தை வழங்கியது.
171 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணி, பவர்பிளே ஓவர்களில் அதிரடியாக விளையாடி 52/1 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கத்தைக் கண்டது. குறிப்பாக முனீபா அலி 41 ரன்கள் எடுத்து சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்தார். ஆனால், நடு ஓவர்களில் இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் ஆட்டத்தைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். தீப்தி சர்மாவின் அபாரமான சுழலில் சிக்கிய பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
முனீபா அலியை ரன் அவுட் செய்த தீப்தி, பாகிஸ்தானின் சரிவுக்கு வித்திட்டார். இறுதியில் பாகிஸ்தான் அணி 17 ஓவர்களில் வெறும் 106 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய தீப்தி சர்மா 5 விக்கெட்டுகளை (5/10) வீழ்த்தி தனது உலகக் கோப்பை வரலாற்றில் சிறந்த பந்துவீச்சை பதிவு செய்தார். ஸ்ரீ சரணி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். போட்டிக்குப் பிறகு பேசிய தீப்தி சர்மா, 'இந்த வெற்றிக்கான முழுப் பெருமையும் இந்திய அணியையே சாரும். எனது பந்துவீச்சுக்கு உதவிய ஹனுமான் ஜிக்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். அவர் மிகவும் சிறந்தவர். சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் பந்துவீசுவது எனக்கு மிகவும் பிடிக்கும். காற்றில் பந்தின் வேகத்தை மாற்றி மாற்றி வீசியது விக்கெட்டுகளை வீழ்த்த உதவியது' என்றார்.