இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்று (ஜூலை 1) செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட் மைதானத்தில் தொடங்குகிறது. இந்த முதல் போட்டிக்கு இங்கிலாந்து அணி தனது பிளேயிங் லெவனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஹாரி புரூக் தலைமையிலான இங்கிலாந்து அணியில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அயர்லாந்து மண்ணில் 0-2 என்ற கணக்கில் டி20 தொடரை இழந்துள்ள இந்திய அணி, இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. இங்கிலாந்து அறிவித்துள்ள பிளேயிங் லெவன்: பில் சால்ட், ஜோஸ் பட்லர், ஹாரி புரூக் (கேப்டன்), ஜேக்கப் பெத்தேல், டாம் பான்டன், சாம் கர்ரன், வில் ஜாக்ஸ், லியாம் டாசன், சாகிப் மஹ்மூத், அடில் ரஷித், லூக் வுட்.
மறுபுறம், இந்திய அணியில் மாற்றம் இருக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அயர்லாந்துக்கு எதிரான தொடரில் சஞ்சு சாம்சன் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் பேட்டிங்கில் சோபிக்கத் தவறியதால், இவர்களில் ஒருவரை நீக்கிவிட்டு, இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. பெல்ஃபாஸ்டில் நடந்த முதல் போட்டியில் 20 பந்துகளில் 49 ரன்கள் குவித்த அபிஷேக் சர்மாவுடன் வைபவ் சூர்யவன்ஷியை தொடக்க வீரராக களமிறக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.
இதுகுறித்து இந்திய உதவி பயிற்சியாளர் ராயன் டென் டோஸ்கேட் கூறுகையில், 'வைபவ் சூர்யவன்ஷி சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட முற்றிலும் தயாராக இருந்தாலும், மற்ற வீரர்களைப் போல அவரும் உரிய நடைமுறைகளைக் கடந்துதான் வர வேண்டும்' என்று தெரிவித்துள்ளார். இருப்பினும், இந்திய அணியின் தொடக்க வரிசையை பலப்படுத்த வைபவ் சூர்யவன்ஷியை அணியில் சேர்க்க வேண்டும் என்ற அழுத்தம் அதிகரித்துள்ளது. இந்த டி20 தொடரின் முதல் போட்டி ஜூலை 1 அன்றும், அடுத்தடுத்த போட்டிகள் ஜூலை 4, 7, 9 மற்றும் 11 ஆகிய தேதிகளில் மான்செஸ்டர், நாட்டிங்ஹாம், பிரிஸ்டல் மற்றும் சவுதாம்டன் ஆகிய மைதானங்களில் நடைபெறவுள்ளன.