மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியின் செயல்பாடு குறித்து விமர்சகர்களாலும் ரசிகர்களாலும் முன்வைக்கப்படும் பாலின பாகுபாடு கருத்துகளுக்கு பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சனா மிர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் வங்கதேச அணிகளிடம் தோல்வியடைந்த பாகிஸ்தான் அணி, நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஆறுதல் வெற்றி பெற்று தனது உலகக்கோப்பை பயணத்தை நிறைவு செய்தது.
பாகிஸ்தான் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சனா மிர், ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் அணிகள் விமர்சிக்கப்படும் விதத்தில் இருக்கும் இரட்டை நிலையை கடுமையாக கேள்வி எழுப்பினார். ஆடவர் அணி சிறப்பாக செயல்படாத போது இதேபோன்ற கருத்துக்கள் ஏன் எழுப்பப்படுவதில்லை என்றும் அவர் வினவினார். 'ஆடவர் மற்றும் மகளிர் அணிகளின் செயல்பாடுகளைப் பற்றி பேசும்போது இங்கு இருக்கும் இரட்டை நிலையை என்னால் பார்க்க முடிகிறது. இந்த விமர்சனங்களின் தொனியை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆம், அணி எதிர்பார்த்த அளவுக்கு விளையாடவில்லை என்பது உண்மைதான், ஆனால் அது மகளிர் அணி என்பதால் ஏன் அதற்கு ஒரு பாலினத்தை ஏன் சேர்க்க வேண்டும்?' என்று சனா மிர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தற்போது உலகக் கோப்பை தொடரில் வர்ணனையாளராகப் பணியாற்றி வரும் சனா, அணியின் தோல்வி மீதான ஏமாற்றம் நியாயமானது என்றாலும், அதை வெளிப்படுத்தும் விதம் கவலை அளிப்பதாகக் கூறினார். இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும், மகளிர் அணியின் செயல்பாடுகளைப் பற்றி விவாதிக்கும் போது அவர்களுக்கு தேவையான உரிய மரியாதையை நாம் இன்னும் வழங்குவதில்லை என்று அவர் வருத்தம் தெரிவித்தார். பாகிஸ்தானில் பெண்கள் தொழில்முறை கிரிக்கெட்டைத் தேர்ந்தெடுத்து விளையாடுவதில் இருக்கும் சவால்களை சுட்டிக்காட்டிய அவர், மக்களின் மனநிலையில் மாற்றம் ஏற்பட வேண்டியது அவசியம் என்பதை வலியுறுத்தினார். 'பாகிஸ்தான் பெண்களாலும் சாதிக்க முடியும் என்பதை அனைவருக்கும் புரிய வைக்க பல வருடங்கள் ஆனது. ஆனால், இந்த மனநிலையை நாம் மாற்றாத வரை நம்மால் அடுத்த கட்டத்திற்கு நகர முடியாது' என்றார்.
மேலும், சமூக வலைதளங்களில் பெண் கிரிக்கெட் வீரர்களை கேலி செய்வதற்கும், தவறான தகவல்களைப் பரப்புவதற்கும் AI மூலம் உருவாக்கப்பட்ட வீடியோக்கள் பயன்படுத்தப்படுவதை சனா மிர் கடுமையாக விமர்சித்தார். இதனால் சம்பந்தப்பட்ட வீரர்களின் குடும்பத்தினர் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர் என்றும் அவர் கூறினார். அணியின் செயல்பாடு கிரிக்கெட் திறமையின் அடிப்படையில் மதிப்பிடப்படாமல், பாலினத்தின் அடிப்படையில் மதிப்பிடப்படுவது தனக்கு மிகுந்த வருத்தமளிப்பதாகக் கூறினார். இறுதியாக, மகளிர் கிரிக்கெட்டில் புதிய திறமைகளைக் கண்டறிவதற்கும், வீராங்கனைகளுக்குள் ஆரோக்கியமான போட்டியை உருவாக்குவதற்கும் அதிக அளவிலான உள்நாட்டுப் போட்டிகளை நடத்த வேண்டும் என்று சனா மிர் வலியுறுத்தினார். அணியில் தங்களது இடத்திற்குப் போட்டி இல்லை என்பதை வீராங்கனைகள் உணரும் போது, அது அவர்களின் ஆட்டத்திறனைப் பாதிக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.