புதுடெல்லி: சட்டவிரோத குடியேற்றத்தால் ஏற்படும் மக்கள் தொகை மாற்றங்களை ஆராய்வதற்காக, ஓய்வுபெற்ற நீதிபதி பிரகாஷ் பிரபாகர் நவ்லேகர் தலைமையில் மத்திய அரசு ஒரு உயர்நிலைக் குழுவை அமைத்துள்ளது. இந்த குழுவில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி துர்கா சங்கர் மிஸ்ரா, முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி பாலாஜி ஸ்ரீவாஸ்தவா, பொருளாதார நிபுணர் டாக்டர் ஷாமிகா ரவி ஆகியோர் உறுப்பினர்களாக செயல்படுவார்கள்.
சட்டவிரோத குடியேற்றம், ஊடுருவல் மற்றும் பிற காரணங்களால் ஏற்படும் அசாதாரண மக்கள் தொகை மாற்றம் எந்தவொரு நாட்டின் நிகழ்காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் ஒரு பெரிய சவாலாக உள்ளது. இதை கருத்தில் கொண்டு, பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2025 ஆம் ஆண்டு சுதந்திர தின உரையின் போது, 'மக்கள் தொகை மாற்றம் குறித்து ஆராய உயர்நிலைக் குழு' அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
இந்த உயர்நிலைக் குழு, மதம் மற்றும் சமூக அடிப்படையில் ஏற்பட்டுள்ள அசாதாரண மக்கள் தொகை மாற்றங்களை விரிவாக ஆய்வு செய்து, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தீர்வுகளைப் பரிந்துரைக்கும். மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் (வெளிநாட்டினர்-I) இக்குழுவின் உறுப்பினர் செயலாளராக பணிபுரிவார்.
இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டதில், சட்டவிரோத குடியேற்றம் ஒரு நாட்டின் எதிர்காலத்திற்கு பெரும் சவாலாக விளங்குவதால், இந்த குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.