சிறு சிறு உடல் உபாதைகளுக்கு வீட்டிலேயே உள்ள பொருட்களைக் கொண்டு செலவின்றி கை வைத்தியம் செய்து குணமாக்கலாம். அந்த வகையில், வாயுத் தொல்லை மற்றும் பல்வேறு உடல் உபாதைகளை குணப்படுத்தும் சில எளிய வைத்திய முறைகளை இங்கு காண்போம்.
தீப்புண் ஏற்பட்டால், வாழைத் தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணெயுடன் கலந்து தடவி வந்தால் தீப்புண், சீழ் வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும். மூல நோயால் பாதிக்கப்பட்டவர்கள், கருணைக் கிழங்கை சிறு துண்டுகளாக நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து சாம்பாராக செய்து சாப்பிட்டு வந்தால் குணம் பெறலாம். மூச்சுப் பிடிப்பு உள்ளவர்கள், சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் ஆகியவற்றை சம அளவு எடுத்து, வடித்த கஞ்சியில் கலந்து சூடுபடுத்தி, மூச்சுப் பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும்.
உதடு வெடிப்பிற்கு, கரும்புச் சக்கையை எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி வர உதட்டு வெடிப்பு குணமாகும். வாயுத் தொல்லையால் அவதிப்படுபவர்கள், வேப்பம் பூவை உலர்த்தி தூளாக்கி வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுத் தொல்லை மற்றும் ஆறாத வயிற்றுப் புண் நீங்கும். பால் கட்டி அல்லது பால் சுரக்காத பிரச்சனை உள்ளவர்கள், வெற்றிலையை தணலில் வாட்டி, அடுக்கடுக்காக வைத்துக் கட்டினால் பால் கட்டி வீக்கம் கரையும்.
மறையாத தழும்புகள் கூட மறைய, வேப்பம் பட்டை கியாழத்தைக் கலக்கி, அதில் வரும் நுரையை தழும்புகளில் தடவி வரலாம். அரளிச் செடியின் பாலை புழுவெட்டுள்ள இடங்களில் தடவி வந்தால், புழுவெட்டு மறைந்து முடி வளரும். நகச்சுற்று பிரச்சனை உள்ளவர்கள், வெற்றிலையுடன் கற்சுண்ணாம்பு சேர்த்து அரைத்து, சீழ் கோர்த்த நகச்சுற்றுக்கு பூசலாம். மேலும், வாயுத் தொல்லைக்கு, வெள்ளைப் பூண்டின் தோலை அகற்றி, பசும்பாலில் இட்டு காய்ச்சி அருந்தினால் வாயுத் தொல்லை நீங்கும்.