தங்கம், வெள்ளி மற்றும் பிளாட்டினம் ஆகியவற்றின் இறக்குமதி வரி 10% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய வரி விதிப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. தற்போது 5% இறக்குமதி வரி விதிக்கப்பட்டு வரும் இந்த விலைமதிப்புள்ள உலோகங்களின் விலை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றமான சூழல் காரணமாக, நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால், குடிமக்கள் தங்கம் வாங்குவதை தவிர்க்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாட்களுக்கு முன்னர் வேண்டுகோள் விடுத்த நிலையில், இந்த வரி உயர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வருவாய் துறையின் சுங்க சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, தங்கம், வெள்ளி, பிளாட்டினம் மட்டுமல்லாமல், நகைத் தொழிலுக்கான உதிரிபாகங்கள் மற்றும் விலைமதிப்புள்ள உலோகங்கள் தொடர்பான தொழில்துறை இறக்குமதிகளின் மீதான வரிகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, தங்கம் மற்றும் வெள்ளி நகைகளில் பயன்படுத்தப்படும் கொக்கிகள், பிணைப்புகள், பிடிப்பான்கள், ஊசிகள் மற்றும் திருகு பின்புறங்கள் போன்ற சிறிய பாகங்களுக்கு 5% சுங்க வரியும், பிளாட்டினம் பாகங்களுக்கு 5.4% வரியும் விதிக்கப்படும்.