மாநில ஆளுநரின் தேவை குறித்து தமிழக சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் தனது நிலைப்பாட்டை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக மாணவர்களின் தேவைகள் குறித்து ஆளுநருக்கு தெரியாது என்றும், மாநிலத்தை நிர்வகிக்கும் அரசுக்கு மட்டுமே அது தெரியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆளுநர் என்பவர் ஒரு மேனேஜர் போன்றவர் என்றும், அவர் சென்றால் அடுத்தவர் வருவார் என்றும், எனவே ஆளுநரே தேவையில்லை என்பதே தங்கள் நிலைப்பாடு என்றும் அமைச்சர் கூறியுள்ளார். பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனத்தை மாநில அரசே மேற்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள சீர்மிகு சட்டப் பள்ளி மற்றும் இணைவு பெற்ற 21 சட்டக் கல்லூரிகளில் ஐந்தாண்டு சட்டப் படிப்பில் இடங்களை தேர்வு செய்த மாணவர்களுக்கு அமைச்சர் நிர்மல் குமார் ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கினார். தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கும் அவர் ஆணைகளை வழங்கினார். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சட்டக் கல்லூரிகளும் மேம்படுத்தப்பட்டு, மாணவர்களுக்கான உள்கட்டமைப்பு வசதிகள் அதிகரிக்கப்படும் என்றும், விரைவில் சென்னையில் பெண்களுக்கான உலகத் தரம் வாய்ந்த சட்டக் கல்லூரி தொடங்கப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மின்சாரத்துறை வெள்ளை அறிக்கையில் கடனுக்கான காரணங்கள் இடம்பெறுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், இது தொடர்பான விவரங்களை சேகரிக்கும் பணி நடைபெற்று வருவதாக கூறினார். கடன் வரவு, கொள்முதல், மின்சார பயன்பாடு, புதிய திட்டங்கள் மற்றும் கடன் சுமைக்கான காரணங்கள் போன்ற விவரங்கள் ஆராயப்பட்டு வருவதாகவும், இரண்டு நாட்களில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மின்வெட்டு தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் நிர்மல் குமார், மின்வெட்டு ஏற்படுவதற்கான காரணங்களையும், அதை சரிசெய்ய எடுக்கும் நேரத்தையும் தினமும் தெரிவித்து வருவதாக கூறினார். 125 குழுக்கள் அமைக்கப்பட்டு, மின்வெட்டு பகுதிகளை ஆய்வு செய்து வருவதாகவும் அவர் விளக்கினார்.