சென்னையில் இன்று (மே 14) 22 காரட் ஆபரணத் தங்கம் விலை பவுனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது. அதேவேளையில், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்துள்ளது.
முன்னதாக, அந்நியச் செலாவணி கையிருப்பைப் பாதுகாக்கும் நோக்கில், ஓராண்டுக்கு தங்கம் வாங்குவதைத் தவிர்க்குமாறு பிரதமர் நரேந்திர மோடி மக்களுக்கு அறிவுறுத்தியிருந்தார். இதன் ஒரு பகுதியாக, தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு 6% லிருந்து 15% ஆக உயர்த்தியது. இந்த வரி உயர்வின் எதிரொலியாக, தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
நேற்று (மே 13) ஒரே நாளில் தங்கம் விலை பெரும் ஏற்ற இறக்கங்களைக் கண்டது. காலை நிலவரப்படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.1070 உயர்ந்து ஒரு கிராம் ரூ.15,400-க்கும், பவுனுக்கு ரூ.8,560 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1,23,200-க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆனால், மாலையில் விலை சரிந்து, ஒரு கிராம் ரூ.15,000-க்கும், பவுன் ரூ.1,20,000-க்கும் விற்பனையானது. இந்நிலையில் இன்று காலை மீண்டும் விலை உயர்ந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி, 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.15,050-க்கும், பவுன் ரூ.1,20,400-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 18 காரட் தங்கத்தின் விலையும் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.12,570-க்கும், பவுன் ரூ.1,00,560-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.315-க்கும், ஒரு கிலோ ரூ.3,15,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த இறக்குமதி வரி உயர்வு, இந்தியாவின் தங்கம் மற்றும் வெள்ளி தேவையை குறைக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இது மீண்டும் தங்கக் கடத்தலைத் தூண்டக்கூடும் என தொழில் துறையினர் எச்சரித்துள்ளனர். கடந்த 2024-ம் ஆண்டு மத்தியில் இந்தியா வரிகளைக் குறைத்தபோது தங்கக் கடத்தல் தணிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.