நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டு அருகே, இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ளது 'புத்தநில்கந்தா திருக்கோவில்'. 6-ஆம் நூற்றாண்டில் விஷ்ணு குப்தா மன்னரால் கட்டப்பட்ட இந்த ஆலயம், மகாவிஷ்ணுவுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள 16 அடி உயர மகாவிஷ்ணு சிலை, பல தலை நாகமான ஆதிசேஷனின் மீது பள்ளி கொண்டிருக்கிறார். பசால்ட் பாறையில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட இந்த அற்புத சிற்பம், 42 அடி நீளம் கொண்டது. குறிப்பாக, குளத்தில் நீர் நிரம்பியிருக்கும்போது, இந்த சிலை தண்ணீரில் மிதப்பது போன்ற பிரமிக்க வைக்கும் தோற்றத்தை அளிக்கிறது.
இந்த சயனகோல மகாவிஷ்ணு சிலை, வைகுண்டத்தில் திருப்பாற்கடலில் பள்ளி கொண்டிருப்பதை கண்முன்னே நிறுத்துவதாக பக்தர்கள் கூறுகின்றனர். இக்கோவிலுக்கு நேபாளம் மட்டுமல்லாது, இந்தியாவிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர். இங்குள்ள காட்சி, பக்தர்களுக்கு மன அமைதியையும், தெய்வீக அனுபவத்தையும் ஒருங்கே வழங்குகிறது.
ஒவ்வொரு ஆண்டும், 'ஹரிபோதினி' ஏகாதசியையொட்டி இங்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். வைகுண்ட ஏகாதசிக்கு அடுத்தபடியாக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படும் ஹரிபோதினி ஏகாதசியில், பக்தர்கள் மிகுந்த பக்தியுடன் இந்த மகாவிஷ்ணுவை வழிபடுகின்றனர். இந்த ஏகாதசி, கார்த்திகை மாதத்தின் தொடக்கத்தில் வரும் வளர்பிறை ஏகாதசியாகும்.
தண்ணீரில் மிதப்பது போன்ற தோற்றத்தில் அமைந்துள்ள இந்த மகாவிஷ்ணு சிலை, பக்தர்களுக்கு ஒரு அரிய ஆன்மீக அனுபவத்தை அளிக்கிறது. பழமையும், அதிசயமும் ஒருங்கே அமையப்பெற்ற இந்த கோவில், பக்தர்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும் தலமாக விளங்குகிறது.